தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நிவாரண முகாம்களில் தங்க கலெக்டர் அழைப்பு

நிவாரண முகாம்களில் தங்க கலெக்டர் அழைப்பு

நிவாரண முகாம்களில் தங்க கலெக்டர் அழைப்பு


ADDED : டிச 12, 2024 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 12, 2024 06:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் ' பெஞ்சல்' புயலின் போது மீட்கப்பட்ட முதியவர்கள் மற்றும் குடும்பத்தினர் வெள்ளம் வரும் வரை காத்திருக்காமல், அருகில் இருக்கும் நிவாரண முகாம்களில் தங்க கலெக்டர் குலோத்துங்கன் அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த, 24 மணி நேரத்தில் தமிழக மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும், அதனால் புதுச்சேரியில் நாளை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

புதுச்சேரியை பெரிதாக சேதப்படுத்தி ஸ்தம்பிக்க வைத்த 'பெஞ்சல்' புயல் மற்றும் வெள்ளப்பெருக்கில் இருந்து கற்றுக்கொண்ட பாடத்தை நினைவில் வைத்து செயல்பட வேண்டும்.

வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள், அத்தியாவசிய மருந்துகளை தேவைக்கு ஏற்ப வாங்கி வைத்து கொள்ள வேண்டும்.

பேட்டரி விளக்குகளை முழுதுமாக சார்ஜ் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். கூடுதலாக, மெழுகுவர்த்தி, தீப்பெட்டிகளை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். முதியவர்கள், உடல் இயலாதவர்கள் பாதுகாப்பான இடம் அல்லது நிவாரண முகாம்களில் இருக்க வேண்டும்.

கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள் அருகில் உள்ள தாய்சேய் நல மையத்தினை தொடர்பு கொண்டு, ஆலோசனையின் படி நடந்து கொள்ள வேண்டும்.

'பெஞ்சல்' புயலின் போது மீட்கப்பட்ட முதியோர் மற்றும் குடும்பத்தினர் வெள்ளம் வரும் வரை காத்திருக்காமல் அருகில் இருக்கும் நிவாரண முகாம்களில் வந்து தங்குவதன் மூலம், மாவட்ட நிர்வாகம் வேறு ஆயத்தப்பணிகளில் கவனம் செலுத்த ஒத்துழைக்க வேண்டும்.

கெட்டுப்போன மற்றும் எளிதில் செரிக்காத உணவுகளை தவிர்க்க வேண்டும். தரையில் இருக்கும் மின் சாதனங்களின் மின் இணைப்பினை துண்டித்து வைக்க வேண்டும். மின் கம்பங்கள், மின்மாற்றி, துாண்கள் மற்றும் அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொடக்கூடாது.

கழிவு நீர் அடைப்பு பற்றி உடனடியாக உள்ளாட்சி அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். நீர் நிலைகள் நிரம்பி வழிவதால் குளிப்பது, விளையாடுவது, மீன் பிடிப்பது என எந்த காரணம் கொண்டும் அருகில் செல்ல வேண்டாம். அவசியமான தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

சமூக வலை தளங்களில் உலா வரும் தவறான செய்திகளை நம்ப வேண்டாம். வானிலை அறிக்கை மற்றும் மாவட்ட நிர்வாகம் அளிக்கும் அதிகாரப்பூர்வு செய்திகள், எச்சரிக்கைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும்.

புயல் தொடர்பான புகார்களுக்கு இலவச உதவி எண்களான, 112, 1077 மற்றும் வாட்ஸ் அப் எண் - 9488981070 ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us