அடாவடி ஆட்டோக்காரர்களால் முடங்கிப்போன அரசு திட்டம்
அடாவடி ஆட்டோக்காரர்களால் முடங்கிப்போன அரசு திட்டம்
ADDED : டிச 07, 2025 06:17 AM

ஆ ட்டோக்காரர்கள் மிரட்டலால் புதுச்சேரியில் அரசு திட்டமே நின்று போன கொடுமையை என்னவென்று சொல்வது.
புதுச்சேரியில் முதல் முறையாக சுய உதவி குழு பெண்கள் கராத்தே பயிற்சியுடன் பேட்டரி ஆட்டோ ஓட்ட புதுச்சேரி நகராட்சி சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களுக்கு 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் 38 பேட்டரி ஆட்டோக்களும் வழங்கப்பட்டன.
இதில், 2 ஆட்டோக்கள் கடற்கரை சாலை, தலைமை செயலகம் துவங்கி, டுப்ளெக்ஸ் சிலை வரையிலும், பிற ஆட்டோக்கள் புதுச்சேரி நகரம் மற்றும் ஆரோவில் வரை இயக்க அனுமதி தரப்பட்டது. இந்த பேட்டரி ஆட்டோவில் பயணிப்பவர்கள், அதற்கான கட்டணத்தை எளிதாக செலுத்தும் வகையில் (ஆப்) செயலி ஒன்றையும் புதுச்சேரி நகராட்சி வெளியிட்டது.
இதனால் குறைவான கட்ட ணத்தில் பொதுமக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் பயனளிக்கும் வகையில் இந்த திட்டம் புதுச்சேரியில் கோலாகலமாக, கவர்னர் மற்றும் முதல்வரால் துவங்கி வைக்கப்பட்டது.
இந்த பேட்டரி ஆட்டோக்களால் சில ஆட்டோக்காரர்கள் தங்கள் தொழிலுக்கு நஷ்டம் ஏற்படும் என கூறி மிரட்டல் விட்டதால், திட்டமே முற்றிலுமாக முடங்கிப் போய் புதுச்சேரி நகராட்சியில் அனைத்து பேட்டரி ஆட்டோக்களும் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டு விட்டன.
யாரோ சில தனிநபர்கள் அரசு திட்டத்தை முடக்குவதும், அவர் மீது போலீஸ் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் ஓலா, உபேர், ராபிடோ உள்ளிட்ட வாகனங்களின் செயல்பாட்டையும் சிலர் அடாவடியாக தடுத்து வருகின்றனர்.
அரசு அனுமதி அளித்த திட்டத்தை தடுக்கும் நபர்கள் மீது உடனடியாக கவர்னர் கைலாஷ்நாதன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
