‘கவர்னர் தனது நீர் மேலாண்மை அனுபவத்தை புதுச்சேரி வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்’
‘கவர்னர் தனது நீர் மேலாண்மை அனுபவத்தை புதுச்சேரி வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்’
ADDED : ஆக 25, 2026 06:21 PM
புதுச்சேரி: கவர்னர் தனது நீர் மேலாண்மை அனுபவத்தை புதுச்சேரியின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்த வேண்டும் என, தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்குமார் வலியுறுத்தி உள்ளார்.
சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, அவர், பேசியதாவது;
சட்டசபையில் நாம் விவாதிக்கும் திட்டங்களும், ஒதுக்கீடு செய்யும் நிதியும் மக்கள் கைக்குச் சென்றடைவது தலைமைச் செயலர் தலைமையிலான நிர்வாக அமைப்பின் கைகளில் தான் இருக்கிறது. புதுச்சேரி மாநிலம் மிகவும் கவலைக்கிடமான ஒரு நிலத்தடி நீர் மற்றும் குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. கடல்நீர் ஊடுருவல், நகர்ப்புற விரிவாக்கத்தால் இயற்கை நீர் ஆதாரங்கள் அடைபட்டு, மழைநீர் நிலத்தடிக்குச் செல்வது வெகுவாகக் குறைந்து விட்டது. பாசன ஏரிகளும், 84க்கும் மேற்பட்ட முக்கியக் கால்வாய்களும் துார்வாரப்படாமல், ஆக்கிரமிப்புகளால் முழு கொள்ளளவை இழந்துள்ளது.
நமது கவர்னர் நீர் மேலாண்மை நிபுணத்துவம் கொண்டவர். அவரது அனுபவத்தையும் டில்லி தொடர்புகளையும் பயன்படுத்தி, மத்திய அரசின் மூலம் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான சிறப்பு உள்கட்டமைப்பு நிதியைப் பெற்றுத் தர வேண்டும். தடுப்பு அணைகளையும், நிலத்தடி நீர் மறுஊட்ட அமைப்புகளையும் உருவாக்க வேண்டும்.
புதுச்சேரி விமான நிலையம் விரிவாக்கம், துறைமுக மேம்பாடு, கழிவு நீர் மேலாண்மை, நவீன சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் கழிவு நீரையும், தரம் பிரிக்கப்பட்ட திடக்கழிவுகளையும் முறையான மறுசுழற்சிக்கு உட்படுத்த வேண்டும். கவர்னர், தனது நீர் மேலாண்மை அனுபவத்தையும் செல்வாக்கையும் புதுச்சேரியின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்த வேண்டும்’ என்றார்.
