/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காயலான் கடைக்கு போன அரசின் இலவச சைக்கிள்கள்
/
காயலான் கடைக்கு போன அரசின் இலவச சைக்கிள்கள்
ADDED : நவ 03, 2024 05:50 AM

காரைக்காலில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச சைக்கிள் இரும்புக்கடையில் மலைபோல் குவிந்து கிடக்கும் அவல நிலை சமூக வலைதலத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் காமராஜர் மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 9ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கி வருகிறது.
கடந்த காலங்களில் மாணவர்களுக்கு சைக்கிள் தரமானதாக வழங்கப்பட்டது. இந்த இலவச சைக்கிள்கள் சமீப காலங்களாக, இலவசம் தானே என்பதற்காக, தரமற்றதாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மாணவர்கள் ஆசையோடு வாங்கிச் செல்லும் சைக்கிள்கள் அடுத்த ஓரிரு நாளிலேயே பழுதடைந்து விடுகிறது. அதனை பழுது நீக்க பெரும் தொகை செலவிடும் நிலை உள்ளது. இதனால், பல மாணவர்கள் அரசு வழங்கிய இலவச சைக்கிள்களை பள்ளிகளில் திரும்ப ஒப்படைத்து விடுகின்றனர்.
இவ்வாறு மாணவர்கள் திருப்பி ஒப்படைத்த 200க்கும் மேற்பட்ட சைக்கிள்கள், தற்போது, காரைக்கால் புறவழிச்சாலையில் உள்ள காயலாங்கடையில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சைக்கிள்கள் உடைத்து, இரும்பு உருக்கு ஆலைக்கு அனுப்பப்பட உள்ளது.
பல கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் இலவச சைக்கிள் திட்டம், தரமின்றி வழங்குவதால் மக்களின் வரிப்பணம் பாழாவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.