/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 42 லட்சம் மோசடி: எம்.டி.எஸ்., ஊழியர் கைது
/
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 42 லட்சம் மோசடி: எம்.டி.எஸ்., ஊழியர் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 42 லட்சம் மோசடி: எம்.டி.எஸ்., ஊழியர் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 42 லட்சம் மோசடி: எம்.டி.எஸ்., ஊழியர் கைது
ADDED : அக் 24, 2024 05:54 AM

மாஜி தலைமை பொறியாளருக்கு வலை
புதுச்சேரி: பொதுப்பணித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, 6 பேரிடம் ரூ. 42 லட்சம் மோசடி செய்த எம்.டி.எஸ்., ஊழியரை கைது செய்த போலீசார் முன்னாள் தலைமை பொறியாளரை தேடிவருகின்றனர்.
புதுச்சேரி மேல்சாத்தமங்கலத்தை சேர்ந்தவர் முருகன், 43; ஐ.டி.ஐ., படித்தவர். பொதுப்பணித்துறை எம்.டி.எஸ்., ஊழியரான காட்டேரிக்குப்பம், சுத்துக்கேணி மெயின்ரோட்டைச் சேர்ந்த கென்னடி, 44; என்பவரை சந்தித்து பொதுப்பணித்துறையில் வேலை வாங்கி தர கோரினார்.
அரசு வேலைக்கு ரூ. 3 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என கென்னடி தெரிவித்தார். முருகன் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கிய ரூ. 3 லட்சம் பணத்துடன் கடந்த 16-09-2016 அன்று, ரத்னா நகர், 3வது குறுக்கு தெருவில் வசிக்கும் அப்போதைய பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி வீட்டிற்கு சென்றார்.
வாசலில் காத்திருந்த கென்னடி, முருகனிடம் இருந்து ரூ. 3 லட்சம் பணத்தை வாங்கி கொண்டு சத்தியமூர்த்தியிடம் கொடுத்தார். பல மாதங்கள் ஆகியும் வேலை கிடைக்கவில்லை.
இதனால் முருகன் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தியிடம் விசாரித்தபோது, தன்னிடம் கென்னடி ரூ. 2 லட்சம் மட்டுமே கொடுத்தார்.ஓரிரு வாரத்தில் வேலை வந்து விடும் என கூறி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
முருகன், கடந்த ஜூலை 15ம் தேதி பொதுப்பணித்துறை நீர்பாசன அலுவலகத்திற்கு சென்று எம்.டி.எஸ்., ஊழியர் கென்னடியிடம், தனது பணத்தை திருப்பி கொடு என கேட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த கென்னடி கையில் வைத்திருந்த பைக் சாவியால் முருகன் மார்பு மற்றும் முகத்தில் குத்தி காயப்படுத்தினார். முருகன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக பெரியக்கடை போலீசார் கென்னடி மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில், முருகன் மற்றும் அவருடன் சேர்ந்து 6 பேரிடம், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 42 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக அப்போதைய தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, எம்.டி.எஸ்., ஊழியர் கென்னடி மீது ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார், முன்னாள் தலைமை பொறியாசளர் சத்தியமூர்த்தி மற்றும் கென்னடி ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர்.
இதில், எம்.டி.எஸ்., ஊழியர் கென்னடியை சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார் நேற்று கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தலைமறைவாக உள்ள முன்னாள் தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தியை தேடி வருகின்றனர்.

