/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சென்டாக்கிற்கு விண்ணப்பிக்க வழிகாட்டுதல்கள் வெளியீடு
/
சென்டாக்கிற்கு விண்ணப்பிக்க வழிகாட்டுதல்கள் வெளியீடு
சென்டாக்கிற்கு விண்ணப்பிக்க வழிகாட்டுதல்கள் வெளியீடு
சென்டாக்கிற்கு விண்ணப்பிக்க வழிகாட்டுதல்கள் வெளியீடு
ADDED : ஏப் 19, 2026 10:43 PM
புதுச்சேரி: பிளஸ் 2 பொதுத் தேர்வு ரிசல்ட் வெளியாக உள்ள சூழ்நிலையில் சென்டாக்கிற்கு விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ் பற்றிய விபரங்களையும், வழிகாட்டுதல்களையும் சென்டாக் வெளியிட்டுள்ளது.
புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான ரிசல்ட் மே 8ம் தேதி வெளியாகிறது. எனவே, புதுச்சேரியில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை நடைமுறைகளை உயர்கல்வியும் துறையும் சென்டாக்கும் முன் கூட்டியே துவக்கியுள்ளன.
விண்ணப்பிக்கும் போது ஏற்படும் கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்க்கவும், ஆவணச் சரிபார்ப்பில் காலதாமதத்தைத் தவிர்க்கவும், சான்றிதழ்களை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க சென்டாக் அறிவுறுத்தி அதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
பொதுவான சான்றிதழ்கள்
விண்ணப்பிக்கும் மாணவர்கள் சமர்பிக்கும் அனைத்துச் சான்றிதழ்களும் 2026 ஜனவரி 1ம் தேதிக்குப் பிறகு பெறப்பட்டதாக இருத்தல் வேண்டும். குடியிருப்பு, குடியுரிமை சான்றிதழுக்கும் இது பொருந்தும்.
சாதிச் சான்றிதழ்:: அகில இந்திய ஒதுக்கீடு அல்லது மத்திய அரசு நிறுவனங்களுக்கான சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. புதுச்சேரி மாநிலத்திற்கென வழங்கப்பட்ட சான்றிதழே அவசியம்.
வருமானச் சான்றிதழ்:
இது 01.04.2026 அன்றோ அல்லது அதற்குப் பிறகோ பெறப்பட்டதாக இருக்க வேண்டும்.
சிறப்பு இட ஒதுக்கீடு சான்றிதழ்கள்:: தகுதியுள்ள சிறப்பு இட ஒதுக்கீட்டு கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அந்தந்த துறைகளிடம் இருந்து முறைப்படி பெறப்பட்ட சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், சுகாதார மற்றும் குடும்ப நல சேவைகள் இயக்குநரகத்தால் வழங்கப்பட்ட சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள் சைனிக் நலத்துறையிடம் இருந்து பெறப்பட்ட சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். விளையாட்டு வீரர்கள் கடந்த 5 ஆண்டுகளில் பெற்ற சான்றிதழ்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் சுதந்திரப் போராட்ட வீரர் பிரிவால் வழங்கப்பட்டதை சமர்ப்பிக்க வேண்டும்.
இதர இட ஒதுக்கீடுகள்:: பிராந்திய ஒதுக்கீட்டில் காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் பகுதி மாணவர்கள் அந்தந்த பிராந்தியத்திற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும். விவசாயிகளின் வாரிசுகள், வருவாய்த்துறையிடம் இருந்து 01.04.2026 -க்கு பிறகு பெற்ற சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.
அரசுப் பள்ளி மாணவர் ஒதுக்கீடு:: சென்டாக் சேர்க்கையில் 10 சதவீத இட ஒதுக்கீடு உண்டு. இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க, நீட் படிப்புகளுக்கு 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் படித்ததற்கான மாற்றுச் சான்றிதழ், நீட் அல்லாத படிப்புகளுக்கு 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்ததற்கான சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
கிராமப்புற இடஒதுக்கீடு சான்றிதழ்:: கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் படிப்புகளுக்கு கிராமப்புற இடஒதுக்கீடு உண்வு. எனவே மாணவர்கள் தாங்கள் கடைசியாகப் படித்த பள்ளித் தலைமையாசிரியரிடம் பெறப்பட்ட கிராமப்புற இட ஒதுக்கீடு சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
இ.டபுள்யூ.எஸ்.: பொருளாதாரத்தில் நலிந்த இ.டபுள்யூ.எஸ்., பிரிவினர் வருவாய்த்துறையிடம் இருந்து 01.04.2026க்கு பிறகு பெறப்பட்ட சான்றிதழ், தெலுங்கு மொழி சிறுபான்மையினர் மாற்றுச் சான்றிதழில் தாய்மொழி தெலுங்கு எனக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
நீட் மற்றும் நீட் அல்லாத படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் விரைவில் தொடங்கப்படும். அட்டவணை மற்றும் வழிகாட்டுதல்கள் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்படும். எனவே, மாணவர்கள் இப்போதே தங்களுக்குத் தேவையான சான்றிதழ்களை புதுப்பித்து வைத்துக்கொள்வது அவசியம் என்றும் சென்டாக் அறிவுறுத்தியுள்ளது.

