ADDED : அக் 12, 2024 03:28 AM
புதுச்சேரி : பெரியக்கடை, காலாப்பட்டு பகுதியில் குட்கா விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
பெரியக்கடை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு நேரு வீதி- காந்தி வீதி சந்திப்பில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். வெங்கட்டா நகர், 4வது குறுக்கு தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 48; என்பவரது கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கடையில் இருந்த ரூ.1,100 மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
சின்ன காலாப்பட்டு பகுதி டீக்கடையில் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.1080 மதிப்பிலான குட்கா பொருட்களை சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் பறிமுதல் செய்து, கடை உரிமையாளர் ரங்கநாதன், 50; மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.