ADDED : மார் 17, 2026 04:20 AM

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தல் வரும் 9ம் தேதி நடக்க உள்ளது. தேர்தலுக்கான அறிவிப்பு நேற்று முன்தினம் தலைமை தேர்தல் ஆணையர் வெளியிட்டார்.
இதையடுத்து, புதுச்சேரியில் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலானது.
புதுச்சேரி சட்டசபையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அலுவலகங்கள் நேற்று மூடப்பட்டது. அங்கிருந்த பெயர் பலகைகள், அலுவலக அறையில் இருந்த படங்கள் அகற்றப்பட்டன.
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பயன்படுத்தி வந்த அரசு வாகனங்களை சட்டசபை செயலரிடம் ஒப்படைத்தனர். அந்த வாகனங்களில் இருந்து கொடிகள் அகற்றப்பட்டன.
சாய் சரவணன் குமார் எம்.எல்.ஏ., தனது அலுவலகத்திற்கு வந்து பொருட்களை எடுத்து காலி செய்து. காரை ஒப்படைத்தார். பின்னர் சட்டசபை படிகட்டை வணங்கி தனது சொந்த காரில் சட்டசபை வளாகத்தை வலம் வந்து வெளியேறினார்.
வழக்கமாக புதுச்சேரி சட்டசபையில் காலை 9 மணி முதல் பொதுமக்கள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களை சந்திக்க அதிகளவில் வருவார்கள். இதனால் சட்டசபை பரபரப்பாக காணப்படும். ஆனால் தேர்தல் அறிவிப்பு காரணமாக நேற்று சட்டசபை வெறிச் சோடி காணப்பட்டது.
