'உயிரற்ற பொம்மைகள் உணர்வுள்ள மாற்றங்களை ஏற்படுத்தும்'
'உயிரற்ற பொம்மைகள் உணர்வுள்ள மாற்றங்களை ஏற்படுத்தும்'
ADDED : ஏப் 20, 2026 06:53 PM

புதுச்சேரி: அழிந்து வரும் கலைகளுக்கு உயிர் கொடுப்பதோடு, சமூக அவலங்களுக்கு எதிராக பொம்மைகள் மூலம் போராட முடியும் என, புதுச்சேரி தன்னம்பிக்கை பொம்மலாட்ட கலைக்குழு நிறுவனர் எலிசபெத் ராணி தெரிவித்தார்.
அவர், கூறியதாவது:
பொம்மலாட்ட கலையை வெறும் புராணக் கதைகளோடு நிறுத்தாமல், சமூக விழிப்புணர்வுக்கான கருவியாக மாற்றி வருகிறோம். பொம்மலாட்டம் என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. பாலியல் சீண்டல், வன்கொடுமை போன்ற சமூக அவலங்களுக்கு எதிராக பொம்மைகள் மூலம் குரல் கொடுத்து வருகிறோம். கண் தானம், உடல் தானம், போதைப்பொருள் தடுப்பு மற்றும் தாய்ப்பாசத்தின் மேன்மை என பல கருப்பொருள்களில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.
உயிரற்ற இந்தப் பொம்மைகள் பேசும் போது, அது மக்களின் மனதில் ஆழமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆரம்பத்தில் படித்த பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பார்வையற்றவர்களின் உதவியுடன் பிஸ்கட் அட்டைகளைக் கொண்டு தான் இந்த முயற்சியைத் துவங்கினேன். இன்று மக்கள் என் பெயரை மறந்துவிட்டு, என் பொம்மலாட்டத்தை நினைவில் வைத்துள்ளனர். சென்னை வீதி விழாவில் பங்கேற்று உலக சாதனை படைத்துள்ளோம். குறிப்பாக, 76 நிமிடங்களில் பல குரல்களில் பல்வேறு கதைகளைப் பேசி உலக சாதனை நிகழ்த்தியது என் கலைப் பயணத்தில் முக்கிய மைல்கல்.
பள்ளிகளில் பாலியல் சீண்டலில் இருந்து தற்காத்துக் கொள்வது குறித்துப் பொம்மைகள் மூலம் பாடம் எடுக்கும்போது, குழந்தைகள் அதை உற்று கவனிக்கின்றனர். நிகழ்ச்சி முடிந்ததும் சில குழந்தைகள் கண்ணீருடன் வந்து என்னைக்கட்டி அணைத்துக் கொள்வர். அப்போதுதான் இந்தக் கலை எவ்வளவு வலிமையானது என்பதை உணர்கிறேன்.
நவீனத் தொழில்நுட்ப காலத்தில் அழிந்து வரும் இந்தத் தொன்மையான கலைக்கு, போதிய ஆதரவு இல்லாதது வருத்தமளிக்கிறது. பள்ளிகள், கோவில்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் விழிப்புணர்வு பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் நடத்த விருப்பமுள்ளவர்கள் 96268 84962 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
