சுயேச்சை வேட்பாளர்களுக்கு துாண்டில்:நான்கு முனை போட்டியால் கலக்கம்
சுயேச்சை வேட்பாளர்களுக்கு துாண்டில்:நான்கு முனை போட்டியால் கலக்கம்
ADDED : மார் 29, 2026 07:33 PM

புதுச்சேரி: சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் நான்கு முனைபோட்டி நிலவுகிறது. ஒவ்வொரு ஓட்டும் முக்கியமானதாக மாறியுள்ளதால், அரசியல் கட்சி வேட்பாளர்கள் சுயேச்சைகளுக்கு துாண்டில் போட்டு தங்கள் பக்கம் இழுத்து வருகின்றனர்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கு ஓட்டு பதிவு வரும் 9 ம் தேதி நடக்கின்றது. தேர்தல் களத்தில் 294 பேர் நிற்கின்றனர். அரசியல் கட்சி வேட்பாளர்களை பொருத்தவரை 177 பேர் களத்தில் உள்ளனர். அவர்களுக்கு சற்றும் குறைவில்லாமல் 117 சுயேச்சை வேட்பாளர்களும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் பிரதான கட்சி வேட் பாளர்களை மட்டுமே பிரசாரத்தில் காணமுடிகிறது. ஆர்வமாக மனுக்களை தாக்கல் செய்து, சின்னங்களை பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் பின் சைலண்ட் ஆகிவிட்டனர். அரசியல் கட்சியில் சீட் கிடைக்காத விரத்தியில் களம் இறங்கியுள்ள ஒரு சில சுயேச்சை வேட்பாளர்கள் மட்டுமே பம்பரமாக சுழன்று வருகின்றனர். மற்ற சுயேச்சை வேட்பாளர்கள் களத்திலே இல்லை.
பண பலம், தொண்டர்கள் பலத்துடன் பிரசாரத்தில் ஈடுபடும் முக்கிய கட்சி வேட்பாளர்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தான் சுயேச்சைகள் பலர் தங்கள் பிரசாரத்தை துவக்கவில்லை. மனு தாக்கல் செய்து விட்டோமே என்ற காரணத்திற்காக, ஒரு சில வேட்பாளர்கள் தங்களது ஏரியாவிலும், உறவினர்கள், நண்பர்கள் அதிகம் உள்ள பகுதியிலும் தேர்தல் பிரசாரத்தை நடத்தியுள்ளனர். ஓட்டு கேட்க செல்லும்போது உடன் வருபவர்களுக்கு டீ, டிபன், சாப்பாடு வாங்கிக் கொடுக்க வேண்டும்.
உடன் வரும் வாகனங்களுக்கு டீசல், பெட்ரோல் வழங்க வேண்டும். போஸ்டர்கள் ஒட்டவும், தங்களது சின்னங்களை பிரபலபடுத்தவும் லட்சக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டும். போட்டியிடும் பெரும்பாலான சுயேச்சை வேட்பாளர்கள் வசதி வாய்ப்பற்றவர்கள். இருக்கும் பணத்தை செலவழித்து விட்டு பின் கஷ்டப்பட வேண்டுமே என்ற எண்ணம் காரணமாகவே பலரும் பிரசாரத்தில் ஆர்வம் காட்டவில்லை என்கின்றனர் விஷயம் தெரிந்தவர்கள்.
அரசியல் கட்சியினர் டீலிங்
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி, இண்டி கூட்டணி, த.வெ.க., நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. காங் கட்சி 22 தொகுதிகளில் வேட்பாளர்களை இறக்கிவிட்டுள்ளது. தி.மு.க., இ.கம்யூ., வி.சிறுத்தைகள் கட்சிகள் நிற்கும் தொகுதிகளில் கூட காங்., நிற்கின்றது. அரசியல் கட்சியில் சீட் கிடைக்காதவர்களும் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர். இதனால் ஓட்டுகள் சிதறி, வெற்றிக்கு தோல்விக்கும் இடையே சிறிய வித்தியாசம் மட்டுமே இந்த முறை இருக்கும்.
எனவே, ஒவ்வொரு ஓட்டுகளுமே வெற்றிக்கு முக்கியமானதாக மாறியுள்ளது. இதனால் சுயேச்சை வேட்பாளர்களுக்கு துாண்டில் போட்டு அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்கள் பக்கம் இழுத்து வருகின்றனர்.
உங்களுக்கு எத்தனை ஓட்டு இருக்கு. அதனை அப்படியே எங்களுக்கு போட சொல்லுங்கள்.தேர்தல் வந்ததும் கட்சியில் வந்து சேர்ந்துடுங்க. பெரிய போஸ்டிங் காத்திருக்கு என்று சுயேச்சைகளுக்கு அரசியல் கட்சி வேட்பாளர்கள் துாண்டில் போட்டு இழுத்து வருகின்றனர். ஊசுடு, உப்பளம் தொகுதியில் இந்த முறை ஒரு சுயேச்சை வேட்பாளர்கள் கூட போட்டியிடவில்லை. மாற்ற 28 தொகுதிகளிலும் சுயேச்சைகளுக்கு டிமாண்ட். பெயருக்கு மனு போட்டு கெத்தாக இருக்கும் சுயேச்சை வேட்பாளர்களும் வந்த வரை லாபம் என்று, தங்களது ரேட் சார்ட்டை சொல்லி, பேரம் பேசி வருகின்றனர். இதனால் சுயேச்சைகள் காட்டில் பண மழை பெய்கிறது.
