ADDED : ஏப் 15, 2026 10:22 PM
புதுச்சேரி: தொகுதி மறு வரையறை சட்ட திருத்தத்திற்கு இந்திய கம்யூ., கண்டனம் தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் நாரா கலைநாதன் அறிக்கை:
புதுச்சேரி, தமிழகம் மற்றும் தென் மாநிலங்களை பாதிக்கும் வகையிலும், மாநிலங்களின் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையிலும் மத்திய அரசு அவசரமாக பார்லிமெண்ட்டில் தொகுதி மறு வரையறை சட்ட திருத்தத்தை கொண்டு வரவுள்ளது.
அனைத்து மாநிலங்கள், அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்டறிந்து ஒருமித்த நிலையில் ஜனநாயக ரீதியாக முடிவெடுக்க வேண்டிய இச்சட்ட திருத்தத்தை, அரசியல் உள்நோக்கத்தோடு மத்திய அரசு கொண்டு வருவது ஏற்புடையது அல்ல. 2011ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை பயன்படுத்தி தொகுதி வரையறை செய்வது முறையற்றதாகும்.
பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை முன்னிறுத்துவது போன்ற தோற்றத்தை உருவாக்கி, தொகுதிகளுக்கான மறு வரையறையை மத்திய அரசு முன்னிறுத்துகிறது.
வடமாநிலங்களில் எம்.பி.,க்கள் அதிக எண்ணிக்கையும், தென் மாநிலங்களில் ஒன்றும் இல்லாத விதமாக்கும் நிலையை கொண்டு வருகிறது. அவசர கதியில் செயல்படுத்தப்படும் தொகுதி வரையறை கண்டிக்கத்தக்கது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
