/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுற்றுலா தலமாக மாறிய கைக்கிலப்பட்டு படுகையணை
/
சுற்றுலா தலமாக மாறிய கைக்கிலப்பட்டு படுகையணை
ADDED : டிச 29, 2024 05:49 AM

தொடர் மழையால் கைக்கிலப்பட்டு படுகை அணை நிரம்பி தண்ணீர் வழிந்து வருவதால், திடீர் சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது.
புயல் காரணமாக புதுச்சேரியில் சமீபத்தில் கனமழை பெய்தது. இதனால், புதுச்சேரியில் உள்ள ஏரி, குளங்கள் மற்றும் நீர்வரத்து வாய்க்கால்கள் வேகமாக நிரம்பியது.
இதற்கிடையே, தமிழக பகுதியில் பெய்த கனமழையால், வீடூர் அணை திறக்கப்பட்டதால், சங்கராபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக சங்கராபரணி ஆற்றின் குறுக்கேயுள்ள கூனிச்சம்பட்டு, செட்டிப்பட்டு படுகையணைகள் நிரம்பி வழிந்து வருகிறது.
குறிப்பாக, கைக்கிலப்பட்டு சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட படுகை அணை தற்போது நிரம்பி தண்ணீர் வழிந்தோடுகிறது.
இதனை அறிந்த உள்ளூர் பொதுமக்கள் மட்டுமின்றி அருகிலுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், தங்களது குடும்பத்துடன் கைக்கிலப்பட்டு அணைக்கு வந்து, பார்த்து ரசிப்பதுடன், அணையின் மீது நின்று செல்பியும் எடுத்துக் கொள்கின்றனர். மேலும், குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். நிரம்பி வழியும் கைக்கிலப்பட்டு படுகை அணை தற்போது அப்பகுதி மக்களின் முக்கிய சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது.

