ADDED : பிப் 22, 2024 06:47 AM
புதுச்சேரி : மழலையர் கலை விழாவின் மண்டல அளவிலான போட்டி ஜவகர் சிறுவர் இல்லத்தில் நடந்தது.
புதுச்சேரி பள்ளி கல்வித்துறை சார்பில், அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மழலையர் கலை விழா ஜவகர் சிறுவர் இல்லத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
2023-24ம் ஆண்டிற்கான வட்ட அளவிலான பேச்சு போட்டி, கதை சொல்லுதல், வினாடி - வினா, வாய்ப்பாட்டு, தனி நடனம், குழு நடனம், தனி நடிப்பு, நாடகம், மாறுவேடம், ஓவியம், வண்ணம் தீட்டுதல் போட்டி கடந்த 8ம் தேதி துவங்கி 15ம் தேதி வரை நடந்தது.
முதல் மற்றும் 2ம் இடம் பிடித்தவர்களுக்கு மண்டல அளவிலான போட்டி, ஜவகர் சிறுவர் இல்லத்தில் நடந்தது. போட்டிகளை பள்ளி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி துவக்கி வைத்தார். தொடக்க கல்வி துணை இயக்குநர் முனுசாமி முன்னிலை வகித்தார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஜவகர் சிறுவர் இல்ல தலைமை ஆசிரியர் மணிவேல், பட்டதாரி ஆசிரியர் செல்வதாஸ், உடற்கல்வி பயிற்சியாளர் ராதாக்கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.