UPDATED : ஜூன் 09, 2026 07:52 PM
ADDED : ஜூன் 09, 2026 07:51 PM
கீழடி:கீழடி 11ம் கட்ட அகழாய்வில் செங்கற்களால் கட்டப்பட்ட உலைகலன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கீழடியில் 11ம் கட்ட அகழாய்வு மார்ச் 18 முதல் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் ஏழு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடந்து வருகிறது. வி.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.டி., நடத்திய உலோகவியல் ஆய்வில் கீழடியில் கிடைத்த இரும்பு ஆயுதங்களில் 79.80 சதவிகிதம் இரும்பும், 16.50 சதவிகிதம் சிலிக்கானும், 2.35 சதவிகிதம் அலுமினியமும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. கீழடியில் உலைகலனை பயன்படுத்தி இரும்பு ஆணிகள், கத்திகள், ஈட்டி முனைகள், உளிகள் மற்றும் இரும்பு ஆயுதங்கள் தயாரித்துள்ளனர். கீழடி அகழாய்வில் இரும்பு சம்பந்தப்பட்ட ஏராளமான பொருட்களும் கண்டறியப்பட்டன. 11ம் கட்ட அகழாய்வில் செங்கற்களால் கட்டப்பட்ட உலைகலனும் அருகிலேயே சேதமடைந்த பானைகளும் கண்டறியப்பட்டுள்ளன.
உலைகலன் பயன்படுத்தப்பட்டதற்கு ஆதாரமாக எரிக்கப்பட்ட மணற்குன்றும் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியில் சாயத்தொழில், இரும்பு உருக்கு தொழில், கண்ணாடி மணிகள் செய்யும் தொழில் உள்ளிட்டவைகள் நடந்துள்ளன. இதுவரை கீழடி அகழாய்வில் ஐந்திற்கும் மேற்பட்ட உலைகலன்கள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
