ADDED : மார் 16, 2026 04:36 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநில காங்., மீனவர் அணி செயற்குழு மற்றும் தேர்தல் ஆலோசனைக் கூட்டம், தலைமை அலுவலகத்தில் நடந்தது.
காங்., மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர். அகில இந்திய மீனவர் அணி தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, செயலாளர் காங்கேயன், மாநில மீனவர் அணி தலைவர் வேலு, இளைஞர் அணி தலைவர் ஆனந்தபாபு, மகளிர் அணி தலைவி நிஷா, முன்னாள் அமைச்சர் ஷாஜகான் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், அகில இந்திய மீனவர் அணி தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ பேசுகையில், 'மத்தியில் காங்., ஆட்சி இருந்தபோது இலங்கை கடற்படை, புதுச்சேரி மாநில மீனவர்களை கைது செய்தபோது, உடனடியாக இலங்கை துாதரகத்துடன் பேசி விரைந்து நடவடிக்கை எடுத்தது.
2014ம் ஆண்டு பா.ஜ., ஆட்சி வந்தபின், 12 ஆண்டுகளில் 389 படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்து மீனவர்களை கைது செய்துள்ளது. இதில், ஒரு படகு கூட இதுவரை விடுவிக்கப்படவில்லை. மீனவர்கள் கைது குறித்து பிரதமர் மோடி இதுவரை ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. பா.ஜ., அரசு தமிழக, புதுச் சேரி மீனவர்களின் மீன்பிடி தொழிலை நசுக்கி பொருளாதாரத்தை அழித்து வருகிறது.
வரும் தேர்தலில் மீனவர்கள் ஒற்றுமையாக இருந்து காங்., கூட்டணி ஆட்சிக்கு வர பாடுபட வேண்டும். அடுத்து மத்தியில் காங்., ஆட்சிக்கு வந்தவுடன் மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்' என்றார்.
