/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மத்திய பட்ஜெட் 2026-ல் எல்.ஜே.கே., கட்சியின் தொலைநோக்கு பார்வை திட்டம் அறிவிப்பு
/
மத்திய பட்ஜெட் 2026-ல் எல்.ஜே.கே., கட்சியின் தொலைநோக்கு பார்வை திட்டம் அறிவிப்பு
மத்திய பட்ஜெட் 2026-ல் எல்.ஜே.கே., கட்சியின் தொலைநோக்கு பார்வை திட்டம் அறிவிப்பு
மத்திய பட்ஜெட் 2026-ல் எல்.ஜே.கே., கட்சியின் தொலைநோக்கு பார்வை திட்டம் அறிவிப்பு
ADDED : பிப் 06, 2026 05:33 AM

புதுச்சேரி: லட்சிய ஜனநாயக கட்சி புதுச்சேரி பெண்களுக்காக அறிவித்த வாக்குறுதி, மத்திய பட்ஜெட் 2026-ல் இடம் பெற்றுள்ளதால், ஆக்கபூர்வமான அரசியல் மாற்றங்களை உருவாக்கும் என கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்தள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
நாட்டில் பெண்களை பணி புரிபவர்களாக மாற்றி, அவர்களை பொருளாதார சக்தி மிக்க தலைவர்களாக அதிகாரப்படுத்தினால், எந்த நாட்டின் வளர்ச்சியும் வேகமெடுக்கும். நமது நாட்டின் சமீபத்திய பொருளாதார வளர்ச்சி இந்த யதார்த்த நிலையை பிரதிபலிக்கிறது. நாட்டின் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளாக சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
2017- 18ல் 2.65 டிரில்லியன் டாலர்களாக (ரூ. 170 லட்சம் கோடி) இருந்த நாட்டின் ஜி.டி.பி. 2023--24ல் 3.7 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக (சுமார் ரூ. 300 லட்சம் கோடி) வளர்ந்திருக்கிறது. 2014-15ல் ரூ.86 ஆயிரமாக இருந்த தனி நபர் வருமானம். 2023-24ல் ரூ.1.97 லட்சமாக அதிகரித்தது. இது வருவாயில் ஏற்பட்டுள்ள நிலையான உயர்வை காட்டுகிறது.
இக்காலகட்டத்தில் வரி வசூல், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் முறையான நிதி பங்களிப்பு ஆகியவை அதிகரித்து, பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள பெருகும் வளத்தை உணர்த்துகிறது.
இந்த வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பும் கணிசமாக அதிகரித்துள்ளது. 2017-18ல் 22 சதவீதமாக இருந்த பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு, 2023-24ல் 40.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. பெண்களின் வேலையின்மை விகிதம் 5.6 சதவீதத்தில் இருந்து 3.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கடந்த 7 ஆண்டுகளில் 1.56 கோடிக்கும் அதிகமான பெண்கள் முறைப்படியான பணியிடங்களில் சேர்ந்துள்ளனர்.
முத்ரா கடன்களில் 68 சதவீதம் பெண்களுக்கே வழங்கப்படுகிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 50 சதவீத நிறுவனங்களில் ஒரு பெண் இயக்குனர் உள்ளனர். இது ஒரு தொழிலை உருவாக்குவதிலும், வருவாய் ஈட்டுவதிலும் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்கிறது.
இந்தத் தேசிய போக்கை அங்கீகரித்து, லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் கடந்த டிசம்பர் 24ம் தேதி புதுச்சேரி பெண்களுக்காக பல முக்கியத் திட்டங்களை அறிவித்தேன். பெண்களை புதுச்சேரி பொருளாதாரத்தின் உந்து சக்திகளாக மாற்றுவதே இத்திட்டங்களின் நோக்கமாகும். இதற்காக எனது சொந்தப் பணத்திலிருந்து 100 கோடி ரூபாய் நிதியை ஒதுக்குவதாகவும் அறிவித்திருந்தேன்.
தமிழ் பெண்ணுரிமை போராளி தர்மாம்பாள் பெயரில் அறிவிக்கப்பட்ட 'தர்மாம்பாள் மகளிர் வாழ்வாதார மேம்பாட்டு திட்டம்' இதில் முதன்மையானது.
புதுச்சேரியின் முக்கியச் சுற்றுலா இடங்களில் மின் வணிகத் தளங்கள் மற்றும் 'ஷி- மார்ட்ஸ்' அமைப்பதற்கு ரூ.10 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். ரூ.15 லட்சம் வரையிலான உற்பத்திக் கடன்களுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். இந்த அறிவிப்பு புதுச்சேரிப் பெண்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை உருவாக்கியது.
2026-ல் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த தொலைநோக்கு பார்வையை செயல்படுத்த லட்சிய ஜனநாயக கட்சி உறுதியாக இருக்கிறது.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடு முழுதும் கிராமப்புற பெண்களால் நடத்தப்படும் தொழில் நிறுவனங்களை வளர்க்க ஷி மார்ட்ஸ் என்ற திட்டத்தை பட்ஜெட்டில் அறிவித்திருந்தார். இந்த செய்தியை கேட்டதும், எல்லையற்ற மகிழ்ச்சியை தந்தது. நல்ல சிந்தனைகள் கட்சி எல்லைகளைக் கடந்து செல்லும் என்பதை இந்த அறிவிப்பு உறுதிப்படுத்துகிறது. மக்கள் அவரவருக்கு ஏற்ற கொள்கை விருப்பங்களுடன் இருந்தாலும், நல்ல திட்டங்கள் பிராந்திய எல்லைகளைக் கடந்தும் எதிரொலிக்கின்றன.
லட்சிய ஜனநாயக கட்சி புதுச்சேரி பெண்களுக்காக அறிவித்த வாக்குறுதி ஒரு தேசிய பேசுபொருளாக மாறியிருப்பது, ஆக்கபூர்வமான அரசியல் மாற்றங்களை உருவாக்கும் என்ற நம்பிக்கையை வலிமைப்படுத்துகிறது.
சமூக-பொருளாதார இடைவெளிகளை குறைக்கும் கருவியாக அரசியல் இருக்க வேண்டுமே தவிர இடைவெளியை விரிவுபடுத்தக் கூடாது. கூட்டுறவு கூட்டாட்சி தத்துவம் நாட்டின் வளர்ச்சிக்குத் திறவுகோல்.
எனவே, லட்சிய ஜனநாயக கட்சி அற்பமான அரசியலை விட மக்களின் முன்னேற்றத்திற்கே முன்னுரிமை அளிக்க உறுதியுடன் உள்ளது.
பெண்- தலைமையிலான வளர்ச்சி என்பது வெறும் முழக்கம் மட்டுமல்ல, அது வலிமையான மற்றும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தின் அடித்தளமாகும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

