/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.100 கோடி மோசடியில் முக்கிய குற்றவாளி கைது
/
ரூ.100 கோடி மோசடியில் முக்கிய குற்றவாளி கைது
ADDED : மே 18, 2025 04:45 AM

புதுச்சேரி: புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்தவர் அசோகன், 70; பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரை, 2023ல் தொடர்பு கொண்ட மர்ம நபர், 'கிரிப்டோ கரன்சி'யில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என கூறியதை நம்பி, 'ஆஷ்பே' இணையதள பக்கத்தில், 98 லட்சம் ரூபாய் முதலீடு செய்து, ஏமாந்தார்.
'சைபர் கிரைம்' போலீசில் அசோகன் அளித்த புகாரில், போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், கோவையை தலைமையிடமாக கொண்டு, நடிகையர் தமன்னா, காஜல் அகர்வால் உள்ளிட்ட பிரபலங்களை அழைத்து, 2021ல் 'ஆஷ்பே' நிறுவனம் துவக்கப்பட்டது.
பின், மாமல்லபுரம் சொகுசு ஹோட்டலில் நடந்த விழாவில், ஆஷ்பேவில் முதலீடு செய்த, 100 பேருக்கு, 10 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை மதிப்புள்ள கார்களை முதலீடுகளுக்கு ஏற்ப பரிசாக வழங்கினர்.
மும்பை கப்பல் ஒன்றில் மிகப்பெரிய விழா நடத்தி, அதில் ஆயிரக்கணக்கான மக்களை பங்கேற்க செய்து, ஆஷ்பேவில் முதலீடு செய்யுமாறு நிதி திரட்டியுள்ளனர்.
இதில், புதுச்சேரியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர், 3.6 கோடி ரூபாய் வரை இழந்ததும், நாடு முழுதும், 100 கோடிக்கு மேல் மோசடி நடத்திருப்பதும் தெரியவந்தது.
இது தொடர்பாக, கோவையை சேர்ந்த நித்தீஷ்குமார் ஜெயின், 36, அரவிந்த்குமார், 40, 'ஆஷ்பே' இணையதளத்தை உருவாக்கிய தாமோதரன், 52, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கில், கோவையை சேர்ந்த முக்கிய குற்றவாளியான சையது உஸ்மான், 51, என்பவரை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து, 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.
வழக்கில் மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர்.