/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நீதிமன்ற அறையில் கத்தி திருடிய நபர் கைது
/
நீதிமன்ற அறையில் கத்தி திருடிய நபர் கைது
ADDED : மார் 01, 2026 05:00 AM
புதுச்சேரி: நீதிமன்றத்தில், வழக்கு தொடர்பான சொத்துக்களை பாதுகாக்கும் அறையில் இருந்த கத்திகளை, திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான சொத்துக்களை பாதுகாத்து வைக்கும் அறை உள்ளது. நேற்று முன்தினம் நீதிமன்ற ஊழியர்கள் அந்த அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். நீதிமன்ற தனி அதிகாரி பிரிவில், பணிபுரியும் போலீஸ் மாதவன் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஒரு நபர் அந்த அறையில் நுழைந்து, அங்கிருந்த இரண்டு கத்தியை எடுத்து தனது இடுப்பில் சொருகினார்.
அதை பார்த்த போலீசார், அந்த நபரை பிடிக்க முன்ற போது, கத்தியை கீழே போட்டு விட்டு, மதில் சுவர் மீது ஏறி தப்பியோடினார். இதுகுறித்து, போலீசார் மாதவன், நீதிமன்ற தனி அதிகாரி ஒப்புதலோடு, உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப் பதிந்து, அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில், அரியாங்குப்பத்தை சேர்ந்த ரவிகாந்த் (எ) பரத், 22, என்பது தெரியவந்தது. தற்போது வாணாரப்பேட்டை பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் இவர் மீது, டி.நகர் மற்றும் ஒதியஞ்சாலை போலீஸ் ஸ்டேஷன்களில் கத்தி, கஞ்சா, நாட்டு வெடிகுண்டு வீசியது உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளது.
காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர் கடந்த வாரம் ஜாமினில் வந்தார். புதுச்சேரி கோர்டில் நேற்று முன்தினம் கையெழுத்து போட வந்த அவர், கத்தியை திருடியது தெரியவந்தது.
அவரை கைது செய்து, நேற்று கோர்ட்டில், ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

