ADDED : பிப் 12, 2024 06:42 AM
பாகூர் : சாலை விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஜிப்மர் மருத்துவக் கல்லுாரி மாணவர் உயிரிழந்தார்.
கேரள மாநிலம், புத்தன்வேலி, கைதாரன் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜோபிஜான் மகன் கெவின்ஜான், 27; புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் மருத்துவ மேற்படிப்பு படித்து வந்தார். அங்குள்ள விடுதியில் தங்கி பயின்று வந்த கெவின்ஜான், கடந்த 5ம் தேதி தவளக்குப்பத்திற்கு நண்பர்களுடன் சென்றுவிட்டு, நள்ளிரவு ஆக்டிவா பைக்கில் புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அரியாங்குப்பம் தனியார் கார் ஷோரூம் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி, கெவின்ஜான் தலையில் காயமடைந்ததார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, ஜிப்மரில் அனுமதித்தனர். அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். விபத்து குறித்து அரியாங்குப்பம் தெற்கு போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறார்.
