12 ஆயிரம் குழந்தைகளுக்கு சீருடை அமைச்சர் சிவக்கொழுந்து அறிவிப்பு
12 ஆயிரம் குழந்தைகளுக்கு சீருடை அமைச்சர் சிவக்கொழுந்து அறிவிப்பு
ADDED : ஆக 31, 2026 11:22 PM
புதுச்சேரி: பட்ஜெட் மானிய கோரிக்கையில் அமைச்சர் சிவக்கொழுந்து வெளியிட்ட அறிவிப்பு:
அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வி பயிலும் 2 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு இரண்டு ஜோடி சீருடைகள் வழங்கப்படவுள்ளன. தற்போது, போஷன் டிராக்கர் தரவுகளின்படி, 12,000 குழந்தைகள் அங்கன்வாடி மையங்கள் மூலம் பயனடைந்து வருகின்றனர். எனவே இந்த சீருடை வழங்குவதற்கான உத்தேசச் செலவாக ரூ. 60 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தும் நோக்கில், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி கூடுதல் ஊட்டச்சத்துத் திட்டம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. எனவே, திருத்தப்பட்ட நடைமுறையின்படி, குழந்தைகளுக்கு அவர்களது வயதுக்கு ஏற்ற சத்தான உணவுகள் வழங்கப்படும்.
உணவில் ஒரே மாதிரியான தன்மையைத் தவிர்த்து, குழந்தைகள் விரும்பி உண்ணும் வகையில், காலைச் சிற்றுண்டியாகப் பல்வேறு வகையான பயறுகள் வழங்கப்படும். பயனாளிகள் அனைவருக்கும் தினமும் முட்டைகள் வழங்கப்படும். ஒரு வயது முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பல்வேறு பயறு வகைகள், முட்டை மற்றும் சத்துமாவு வழங்கப்படும்.
மூன்று முதல் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டிற்கு 150 நாட்கள் செறிவூட்டப்பட்ட அரிசியிலான கிச்சடி மற்றும் 150 நாட்கள் கேழ்வரகுப் புட்டு வழங்கப்படும். காலைச் சிற்றுண்டியாக வெள்ளைக் காராமணி, சிகப்புக் காராமணி, முழுப் பாசிப்பருப்பு, வெள்ளைக் கொண்டைக்கடலை மற்றும் கருப்புக் கொண்டைக்கடலை போன்ற பல்வேறு பயறு வகைகளும் வழங்கப்படும்.
மேலும், 2 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வாரத்திற்கு இருமுறை பருவகாலப் பழங்களும், வாரத்திற்கு ஒருமுறை சிறுதானியங்கள் கலந்த சத்துமிக்க பிஸ்கட்டுகளும் வழங்கப்படும்.
