/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாயமான வாலிபர் கொலை? உறவினர்கள் மறியல் போராட்டம் நண்பரின் வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்
/
மாயமான வாலிபர் கொலை? உறவினர்கள் மறியல் போராட்டம் நண்பரின் வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்
மாயமான வாலிபர் கொலை? உறவினர்கள் மறியல் போராட்டம் நண்பரின் வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்
மாயமான வாலிபர் கொலை? உறவினர்கள் மறியல் போராட்டம் நண்பரின் வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்
ADDED : ஜன 01, 2025 05:52 AM

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே காணாமல் போன வாலிபர் குறித்து நண்பரிடம் விசாரித்ததில், கொலை செய்து புதைத்துவிட்டதாக தெரிவித்தார். அவர் அடையாளம் காட்டிய இடத்தில் சடலம் கிடைக்காததால் போலீசார் குழப்பமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் ஆத்திரமடைந்த உறவினர்கள், சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லுார் அடுத்த சேமங்கலம் கிராமத் தைச் சேர்ந்தவர் முருகன் மகன் முத்துக்குமரன், 27; விவசாயி. இவரை கடந்த செப்டம்பர் 19ம் தேதி முதல் காணவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இவரது தந்தை முருகன் கடந்த செப்டம்பர் 20ம் தேதி திருவெண்ணெய்நல்லுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து தேடிவந்தனர்.
இந்நிலையில், முத்துக்குமரனின் நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் நேற்று முன்தினம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அவர், முத்துக்குமரனை அடித்துக் கொலை செய்து, உடலை ஆற்றில் புதைத்து விட்டதாக கூறி உள்ளார். இச்சம்பவம் குறித்து, அவர் போலீசாரிடம் கூறி உள்ளதாவது:
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு முத்துக்குமரனின் தந்தை முருகன் , கரும்பு அறுவடை மூலம் கிடைத்த 8 லட்சம் ரூபாய் பணத்தை முத்துக்குமரனின் வங்கி கணக்கில் செலுத்தியுள் ளார். குடும்ப செலவிற்கு பணம் எடுப்பதற்காக முத்துக்குமரன் என்னை வங்கிக்கு அழைத்துச் சென்றார்.
அப்போது, நான் காசோலையில் முத்துக்குமரனிடம் கையெழுத்து வாங்கி, எனது வங்கி கணக்கிற்கு ரூ.8 லட்சம் பணத்தை மாற்றிக் கொண்டேன். இதையறிந்த முத்துக்குமரன் கேட்டபோது, பணத்தை கொடுக்காமல் நான்கு மாதங்களாக ஏமாற்றி வந்தேன். முத்துக்குமரன் தொடர்ந்து பணத்தை கேட்டுவந்தார். விக்கிரவாண்டியில் உள்ள தலைமை வங்கிக்கு சென்று விசாரித்துக் கொள்ளலாம் எனக் கூறி அவரை அழைத்துச் சென்று, வங்கிக்கு செல்லாமல் அலைக்கழித்து, பின் வீட்டிற்கு அழைத்து வந்தேன்.
வழியில் சேமங்கலம் மலட்டாறு அருகே, முத்துக்குமரனை என்னுடைய நிலத்திற்கு அழைத்து சென்றேன். அங்கு எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் ஆயுதத்தால் தாக்கியதில் முத்துக்குமரன் இறந்தார். உடலை, நிலத்தை ஒட்டியுள்ள ஆற்றில் புதைத்துவிட்டேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, விழுப்புரம் ஏ.எஸ்.பி., ரவீந்திர குமார் குப்தா, திருவெண்ணெய் நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ், தாசில்தார் செந்தில்குமார் ஆகியோர் நேற்று காலை, அந்த வாலிபரை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று, உடல் புதைக்கப்பட்ட இடத்தை காண்பிக்குமாறு கூறினர்.
அவர் காட்டிய இடத்தை தோண்டி பார்த்தபோது, பிரேதம் இல்லாததால் போலீசார் குழப்பமடைந்தனர். கடந்த 2ம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தில் உடல் அடித்து செல்லப்பட்டதா அல்லது வாலிபர் நாடகமாடுகிறாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, முத்துகுமரனின் உறவினர்கள் போலீசாரை கண்டித்து மாலை 3:00 மணியளவில் அரசூர் - பண்ருட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியும், தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.