விரைவில் நியமன எம்.எல்.ஏ.,க்கள்: பா.ஜ.,வினர் உற்சாகம்
விரைவில் நியமன எம்.எல்.ஏ.,க்கள்: பா.ஜ.,வினர் உற்சாகம்
ADDED : மே 03, 2026 05:21 AM
புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நாளை நடக்கிறது. அதனையொட்டி சமீபத்தில் வெளியான பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் மீண்டும் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியே ஆட்சியை பிடிக்கும் என்று கூறி உள்ளன.
அதனையொட்டி தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாளே நியமன எம்.எல்.ஏ.,க்களின் அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவ்வளவு அவசரமாக, நியமன எம்.எல்.ஏ.,க்கள் அறிவிக்கப்படுவதின் பின்னணி குறித்து பா.ஜ., வினர் கூறுகையில், ஆட்சி அமைக்க தேவையான எம்.எல்.ஏ.,க்கள் குறைவாக இருந்தால், நியமன எம்.எல்.ஏ.,க்கள் பயன்படுவர்.
மேலும், ஆதரவு தரும் சுயேச்சைகள் அல்லது சிறிய கட்சிகள் தங்களுக்கு, வேண்டப்பட்டவர்களுக்கு நியமன எம்.எல்.ஏ.,க்கள் கேட்டு அழுத்தம் தருவர். இதற்கு இடம் அளிக்காமல் உடனடியாக நியமன எம்.எல்.ஏ.,க்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
கடந்த முறை மூன்று நியமன எம்.எல்.ஏ.,க்களும் பா.ஜ.,வே எடுத்துக் கொண்டது. இம்முறை என்.ஆர். காங்.,1, பா.ஜ., விற்கு 2 என கூறப்பட்டுள்ளது. என்.ஆர். காங்.,கிற்கு நியமன எம்.எல்.ஏ., மற்றும் ராஜ்யசபா எம். பி., வழங்கினால் மட்டுமே வாரிய தலைவர் பதவிகள் பா.ஜ.,விற்கு வழங்கப்படும் என முதல்வர் தரப்பில் அழுத்தம், திருத்தமாக கூறப்பட்டுள்ளது. அதனால் இம்முறை இந்த இரு பதவிகளும் என்.ஆர்.காங்.,கிற்கு கிடைக்க உள்ளது.
அதனையொட்டி, நியமன எம்.எல்.ஏ.,க்கள் நியமிக்கப்படுவதற்கு உள்துறையிடம் அனுமதி பெறுவதற்கான கோப்புகள் அனைத்தும் கவர்னர் மாளிகையில் தயாராக உள்ளன. முதல்வர் ரங்கசாமி, பா.ஜ., தரப்பில் நியமன எம்.எல்.ஏ.,க்களின் பெயர்களை கொடுத்தால் ஒரே நாளில் உடனடியாக உத்தரவு வந்து விடும் என பா.ஜ.,வினர் படு உற்சாகமாக கூறுகின்றனர்.
மேலும், புதுச்சேரியில் நியமனம் எம்.எல்.ஏ.,க்களுக்கு ஓட்டுரிமை உள்ளது. அதனால் நியமன எம்.எல்.ஏ.,க்களை நியமித்து விட்டால் ஆட்சிக்கு வரும் சிக்கல்களை சுலபமாக தவிர்க்கலாம் என, பா.ஜ.,வின் கணக்கிட்டுள்ளது.
அதனால் ஓட்டு எண்ணிக்கை முடிந்த மறுநாளே நியமன எம்.எல்.ஏ.,க்களின் பெயர் பட்டியல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
