ADDED : மே 16, 2026 04:01 AM

புதுச்சேரி: புதுச்சேரி 16வது சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.,க்கள் வரும் 18ம் தேதி பதவியேற்றுக் கொள்கின்றனர்.
புதுச்சேரியின் 16வது சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில், 18 இடங்களில் தே.ஜ., கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. அதனைத் தொடர்ந்து என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி, கடந்த 13ம் தேதி முதல்வராக பொறுப்பேற்றார். அவருடன், பா.ஜ., நமச்சிவாயம், என்.ஆர்.காங்., மல்லாடிகிருஷ்ணாராவ் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
அதனைத் தொடர்ந்து, தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் சீனியரான அன்பழகனை, தற்காலிக சபாநாயகராக நியமனம் செய்வதற்கு பரிந்துரை செய்து முதல்வர் ரங்கசாமி, கவர்னருக்கு கோப்பு அனுப்பினார்.
அதனையேற்று, அன்பழகனை தற்காலிக சபாநாயகராக நியமனம் செய்திட, கவர்னர் கைலாஷ்நாதன் நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து, முறைப்படியான ஆணையை சட் டசபை செயலர் தயாளன் வெளியிட்டுள்ளார்.
அதனையொட்டி, வரும் 18ம் தேதி தற்காலிக சபாநாயகருக்கு, கவர்னர் கைலாஷ்நாதன் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். தொடர்ந்து அன்றைய தினமே, தற்காலிக சபாநாயகர் அன்பழகன், புதிய எம்.எல்.ஏ.,க்களுக்கு சட்டசபையில் பதவி பிரமாணம் செய்த வைக்கிறார். அதன்பிறகு நிரந்தர சபாநாயகர் தேர்வு நடைபெறுகிறது.
எம்.எல்.ஏ.,வாக பதவி ஏற்காமல் சபாநாயகர் இருக்கையில் அமரலாமா?
தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள அன்பழகன், சட்டசபையில் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து கோப்பில் கையெழுத்திடும் புகைப்படத்துடன், தற்காலிக சபாநாயகராக பொறுப்பேற்றதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அரசியலமைப்பு விதிகளின்படி, புதிதாக தேர்வு செய்யப்படும் தற்காலிக சபாநாயகருக்கு, கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்த பிறகே, சபாநாயகர் தனது இருக்கையில் அமர்ந்து, புதிய எம்.எல்.ஏ.,க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பது மரபு. இந்நிலையில், தற்காலிக சபாநாயகர் நியமன ஆணை வந்ததும், எம்.எல்.ஏ.,வாக பதவியேற்காமல், சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள அன்பழகன், வரும் 18ம் தேதி எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு விழாவிற்கு, முதல்வர் வழியாக கவர்னரிடம் ஒப்புதல் பெறுவதற்கான கோப்பில் அன்பழகன் கையெழுத்திட்டதாக மற் றொரு தரப்பி னர் கூறுகின்றனர்.
