ADDED : பிப் 21, 2024 09:03 AM
புதுச்சேரி : மொபைல்போன் பார்ப்பதை தாய் கண்டித்ததால், மனமுடைந்த கல்லுாரி மாணவி துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி, வாணரப்பேட்டை ஜெயராம் செட்டியார் தோட்டம், இரண்டாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் அன்னம்மாள். கேபிள் தொழில் செய்து வருகிறார். இவரது கணவர் முருகவேல் 10 ஆண்டிற்கு முன் பிரிந்து தனியே சென்றுவிட்டார். இவரது மூத்த மகள் சோபனா (எ) எலிசபெத்,19; அரசு மகளிர் கல்லுாரியில் பி.ஏ., 3ம் ஆண்டு படித்து வந்தார்.
சோபனா தொடர்ந்து மொபைல்போனை பார்த்து கொண்டிருந்ததை அவரது தாய் கண்டித்து வந்தார். நேற்று முன்தினம் அன்னம்மாள் கேபிள் தொழிலுக்கு சென்று விட்டார்.சோபனா கல்லுாரிக்கு செல்லாமல் வீட்டில் மொபைல்போன் பார்த்து கொண்டிருந்தார். மதியம் வீட்டிற்கு வந்த அன்னம்மாள், மகள் சோபனாவை கண்டித்தார்.
இதனால் மன வருத்தத்தில் இருந்த சோபனா, நேற்று முன்தினம் இரவு தாய் அன்னாம்மாளிடம், இனி மொபைல்போன் பார்க்க மாட்டேன் என கூறி சமாதானம் செய்தார். பின்னர் சாப்பிட்டுவிட்டு சோபனா தனி அறையிலும், அன்னம்மாள் மற்றும் அவரது இளைய மகனும் ஹாலில் படுத்து துாங்கினர். காலை 5:00 மணிக்கு சோபனாவின் அறைக் கதவை தட்டிய போது கதவு திறக்கவில்லை.
சந்தேகம் அடைந்து ஜன்னல் வழியாக பார்த்தபோது சோபனா துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அன்னம்மாள் அளித்த புகாரின்பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

