/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமிக்கு முஸ்லிம்கள் வரவேற்பு
/
ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமிக்கு முஸ்லிம்கள் வரவேற்பு
ADDED : பிப் 25, 2024 05:23 AM

கிள்ளை : கிள்ளையில், மாசிமக தீர்த்தவாரிக்கு எழுந்தருளிய ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமிக்கு, பட்டு சாத்தி முஸ்லிம்கள் வரவேற்பு அளித்தனர்.
கடலுார் மாவட்டம், கிள்ளை முழுக்குத்துறையில் நடக்கும் மாசி மக தீர்த்தவாரிக்கு நேற்று முன்தினம் ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி கோவிலில் இருந்து சுவாமிகள் எழுந்தருளினர்.
ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளிய பூவராகசாமிக்கு தைக்கால் மாரியம்மன் கோவிலில் நேற்று காலை தர்மகர்த்தா தியாகராஜன் தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது.
தொடர்ந்து, கிள்ளை தைக்கால் சையத் ஷா ரஹகமத்துல்லா தர்காவில், காலை 10:15 மணிக்கு, பூவராகசாமிக்கு, டிரஸ்டி சையத் சக்காப் தலைமையில், முஸ்லிம்கள், தாம்பூல தட்டில் பழம், 5 படி அரிசி, 501 ரூபாய் பணம், பட்டு சாத்தி வரவேற்பு கொடுத்தனர். நிகழ்ச்சியில், கிள்ளை துணை சேர்மன் கிள்ளை ரவீந்திரன், கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
தர்கா டிரஸ்டி சையத் சக்காப் கூறுகையில், 'மாசிமகத் திருவிழாவிற்கு எழுந்தருளும் ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமிக்கு, 7 தலைமுறைகளாக பாரம்பரிய முறைப்படி பட்டாடை சாத்தி, மத நல்லிணக்கம், சகோதரத்துவத்தை நிலைநாட்டும் வகையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது' என்றார்.