/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு நேரு எம்.எல்.ஏ., தலைமையில் ஊர்வலம்
/
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு நேரு எம்.எல்.ஏ., தலைமையில் ஊர்வலம்
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு நேரு எம்.எல்.ஏ., தலைமையில் ஊர்வலம்
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு நேரு எம்.எல்.ஏ., தலைமையில் ஊர்வலம்
ADDED : ஆக 17, 2025 03:38 AM

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு நேரு எம்.எல்.ஏ., தலைமையில் பொது நல அமைப்பினர் பைக் ஊர்வலம் நடத்தினர்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு நேரு எம்.எல்.ஏ., தலைமையில் பொது நல அமைப்புகள் சார்பில், நேற்று பைக் ஊர்வலம் நடந்தது. சுதேசி மில் அருகில் இருந்து துவங்கிய ஊர்வலம், அண்ணா சாலை, காமராஜர் சிலை, நேரு வீதி, மிஷன் வீதி, மகாத்மா காந்தி ரோடு, முத்தியால்பேட்டை மணிக்கூண்டு, சிவாஜி சிலை இ.சி.ஆர்., ரோடு, ராஜிவ் காந்தி சிலை, இந்திரா சிலை, நெல்லித்தோப்பு சுப்பையா சதுக்கம், எம்.ஜி.ஆர்., சிலை வழியாக வந்து புது பஸ் ஸ்டாண்ட்டில் முடிவடைந்தது.
ஊர்வலத்தில் நேரு எம்.எல்.ஏ., பேசுகையில், 'புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து உரிமையை பெற வேண்டிய ஆண்ட கட்சிகள், ஆளுகின்ற கட்சிகள், எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளை மேற்கொள்ளாமல் ஆட்சிக்கு வர நினைப்பது நியாயமற்றது.
இவர்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மாநில அந்தஸ்து பெற்று தருவோம் என்று வாக்குறுதி கொடுப்பது மக்களை முட்டாளாக்கும் செயல்.
தேர்தலில் போட்டியிடாத பொதுநல அமைப்புகளுக்கு இருக்கும் அக்கறை கூட ஆளும் கட்சிகளுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இல்லை. இவர்கள் நினைத்தால் புதுச்சேரிக்கான மாநில அந்தஸ்து கோரிக்கை வலுப்படும். ஏன் என்றால் பிரதான எதிர்க்கட்சியாக இருப்பவர்களின் கூட்டணியில் இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்த்து 40 எம்.பி.,கள், 10க்கும் மேற்பட்ட ராஜ்ய சபாவில் உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் மனது வைத்தால் மத்திய அரசின் இரு அவைகளிலும் புதுச்சேரிக்கு நியாயமாக வழங்க வேண்டிய மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டும் என, மத்திய அரசை வலியுறுத்தி, பெற்று தர முடியும்.
இதையெல்லாம் செய்யாத இவர்கள் நாங்கள் ஆட்சி அமைத்தால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று தருவோம் என, தேர்தலின் போது கூறுவது வெட்ககேடு.
ஆண்ட மற்றும் ஆளுகின்ற கட்சிகளும் புதுச்சேரி மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் வரும் சட்டசபை தேர்தலுக்குள் பலகட்ட போராட்டங்களை நடத்தி, மாநில அந்தஸ்திற்கு மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்' என்றார்.

