UPDATED : மே 26, 2026 08:57 PM
ADDED : மே 26, 2026 08:52 PM

புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதியில் தொடர் மின் தடையை கண்டித்து நேரு எம்.எல்.ஏ., தலைமையில் பொதுமக்கள் மின்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உருளையன்பேட்டை தொகுதி, புதிய பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மின்தடை ஏற்பட்டு வருகிறது. மின்தடை பல மணி நேரத்திற்கு நீடிப்பதால், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இதனை கண்டித்து, தொகுதி எம்.எல்.ஏ., நேரு தலைமையில் பொதுமக்கள் ரயில் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று, தலைமை மின்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேயம் மக்கள் கழக நிர்வாகிகள், தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
தகவலறிந்த ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.,விடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், மரப்பாலம் துணை மின்நிலையத்திலிருந்து முதலியார்பேட்டை பகுதி வழியாக உருளையன்பேட்டைக்கு மின்விநியோகம் செய்யப்படுகிறது. முதலியார்பேட்டை பகுதிகளில் உள்ள மின்சாதன கட்டமைப்புகளில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், உருளையன்பேட்டை முழுதும் பல மணி நேரம் மின்தடை ஏற்படுக்கிறது.
ஆகையால், மரப்பாலம் துணைமின் நிலையத்திலிருந்து விநியோகிக்கப்படும் மின்சாரத்திற்கு பதிலாக வெங்கடா நகர் துணை மின்நிலையிலிருந்து மின் விநியோகம் செய்ய ஆவண செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக, கடந்த 2024ம் ஆண்டு கடிதம் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என, குற்றச்சாட்டினர்.
இதையடுத்து, போலீசார் தங்களது கோரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதையேற்று, நேரு எம்.எல்.ஏ., மற்றும் மக்கள் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர். இதனால், தலைமை மின்துறை அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.
