நெட் சென்டர் உரிமையாளரிடம் ரூ. 50 ஆயிரம் 'அபேஸ்' தர்மபுரி பலே ஆசாமி கைது
நெட் சென்டர் உரிமையாளரிடம் ரூ. 50 ஆயிரம் 'அபேஸ்' தர்மபுரி பலே ஆசாமி கைது
ADDED : மார் 25, 2026 07:40 AM

பாகூர்: கிருமாம்பாக்கத்தில் நெட் சென்டர் உரிமையாளரிடம், 50 ஆயிரம் ரூபாயை அபகரித்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து சொகுசு காரை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி, கிருமாம்பாக்கம் அடுத்த நரம்பை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில், 38; கிருமாம்பாக்கம் அரசு மருத்துவமனை எதிரே இன்டர்நெட் சென்டர் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை கடையில் இருந்தார். அப்போது, மாருதி சுசூகி சியாஸ் காரில் வந்த டிப்டாப் ஆசாமி ஒருவர் செந்திலிடம் சென்று, தனக்கு அவசரமாக 50 ஆயிரம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது. நான் வெளியூர்; வங்கியில் சென்று எடுக்க முடியாது. அதுவும் தற்போது தேர்தல் நேரம் என்ன செய்வது என்று தெரியவில்லை.
உங்களிடம் 50 ஆயிரம் ரூபாய் இருந்தால், கொடுங்கள், நான் எனது வங்கி கணக்கில் இருந்து உங்களது வங்கி கணக்கிற்கு உடனே பணத்தை அனுப்பி விடுகிறேன் என கூறி உள்ளார். இதனால், மனம் இறங்கிய செந்தில், தனது வங்கி கணக்கு விபரங்களை கூறி உள்ளார். அந்த டிப் டாப் ஆசாமி தனது மொபைல் போனில் ஆன்லைன் மூலமாக பதிவிட்டு பணத்தை அனுப்பி விட்டதாக கூறி, செந்திலிடம் பணத்தை கேட்டுள்ளார்.
செந்தில் தன்னிடமிருந்த 50 ஆயிரம் ரூபாயை கொடுத்து, பணம் சரியாக உள்ளதா என எண்ணி சாரி பார்த்து விட்டு செல்லுங்கள் என கூறி உள்ளார். ஆனால், அந்த நபர், நம்பிக்கை தான் வாழ்க்கை எல்லாம் சரியாக இருக்கும் என கூறி, அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.
பின், செந்தில் தனது வங்கி கணக்கை பார்த்தபோது, அதில் பணம் வரவில்லை என்பது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் சண்முகசத்யா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள ஒரு கடையில் பணத்தை ஏமாற்ற முயன்றபோது, அந்த நபர் போலீசாரிடம் பிடிபட்டார். தகவலறிந்த கிருமாம்பாக்கம் போலீசார், அங்கு சென்று நபரிடம் விசாரித்தனர். அவர், தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதியை சேர்ந்த சபரி 31; என்பதும், செந்திலிடம் பணத்தை பெற்று மோசடி செய்ததும் தெரியவந்தது.
மேலும், விசாரணையில், அவர் லோடு கேரியரை வைத்து தொழில் செய்து வருவதும், இதேபோல், காரைக்கால், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியில், வியாபாரிகள் மற்றும் பொது மக்களை ஏமாற்றி பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த சியாஸ் காரை பறிமுதல் செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
