ADDED : ஜூலை 13, 2026 02:48 AM
புதுச்சேரி: சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யவும், போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்தவும் புதுச்சேரி அரசு புதிய அபராத முறையை அறிவித்துள்ளது.
மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் இந்த அபராத தொகைகள் மாற்றியமைக்கப்பட்டு, ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல்களின் தீவிரத்தை பொறுத்து, முதல் முறை மற்றும் இரண்டாவது முறைக்கான அபராதங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுதல் அல்லது 18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாகனம் ஓட்ட அனுமதித்தல் போன்ற குற்றங்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படுகிறது. அதேபோல் வாகன பதிவு மற்றும் தகுதி சான்றிதழ் இன்றி வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதல் முறை ரூ.2000, மீண்டும் மீறினால் ரூ.5000 மும் அபராதமாக வசூலிக்கப்படும்.
ெஹல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படுவதோடு, ஓட்டுநர் உரிமத்தை மூன்று மாதங்களுக்கு தற்காலிகத் தடை செய்யும் நடவடிக்கையும் எடுக்கப்படும்.
அதிக சுமை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு ரூ.20,000 அபராதத்துடன், கூடுதல் சுமையை இறக்குவதற்கான கட்டணமும் வசூலிக்கப்படும். மது அருந்துதல் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வாகனம் ஓட்டுதல் போன்ற கடுமையான விதிமீறல்களுக்கு ரூ.1000 முதல் ரூ.2,000 வரை அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துதல் போன்ற செயல்களுக்கு தலா ரூ.500 முதல் ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும்.
புதிய விதிகளின்படி, போக்குவரத்து துறையின் உதவிமோட்டார் வாகன ஆய்வாளர் அந்தஸ்திற்கு மேல் உள்ள அதிகாரிகள் மற்றும் காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டர் அந்தஸ்திற்கு மேல் உள்ள அதிகாரிகள் வசூலிக்க அதிகாரம் பெற்றுள்ளனர். இந்த அறிவிப்பு 2021ம் ஆண்டின் பழைய விதிமுறைகளை முழுமையாக ரத்து செய்துவிட்டு புதிய சட்டத் திருத்தங்களை அமல்படுத்துகிறது. ஒட்டுமொத்தமாக 108 போக்குவரத்து விதிமுறைகளுக்கு அபராத தொகை வெளியிடப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
