பொங்கல் பண்டிகைக்கு மண்பானைகள் தயாரிப்பு பணி மும்முரம்; விலை 'கிடுகிடு'
பொங்கல் பண்டிகைக்கு மண்பானைகள் தயாரிப்பு பணி மும்முரம்; விலை 'கிடுகிடு'
ADDED : ஜன 03, 2020 02:31 AM

காரைக்கால்;காரைக்காலில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான மண் பாண்டங்கள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பொங்கல் பண்டிகை, வரும் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், புத்தம் புது மண் பானையில், வீட்டு வாசலில் பொங்கல் இட்டு, பன்னீர் கரும்பு, மஞ்சள் கொத்து ஆகியவற்றை வைத்து, புத்தாடை அணிந்து வழிபாடு செய்வர்.பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பொங்கல் இடுவதற்கான மண் பானைகள் தயாரிக்கும் பணி, காரைக்கால் மாவட்டத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கோட்டுச்சேரி, மேலஒடுதுறை உள்ளிட்ட பகுதிகளில், 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண் பானை தயாரிப்பில் ஈடுபட்டுள் ளனர்.பானை தயாரிக்க தேவையான களிமண். அவற்றை சூளையில் இட்டு சுடுவதற்கு தேவையான தேங்காய் மட்டை உள்ளிட்ட பொருட்கள் விலை அதிகரித்து விட்டதால், மண் பாண்டங்களின் விலையும் இந்தாண்டு கடுமையாக உயர்ந்துள்ளது.கடந்த ஆண்டு 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சிறிய பானை, இந்த ஆண்டு ரூ.50 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது. சட்டி ரூ. 45 முதல் ரூ.50 வரை, அடுப்பு ரூ.50 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப் படுகிறது.
இதுகுறித்து மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகையில், 'முன்பு, கைகளால் இயக்கப்படும் சக்கரத்தை பயன்படுத்தி, மண்பாண்டம் தயாரித்தோம் இதனால், கால விரயம். உடல் வலி ஏற்பட்டது. தற்போது, மின் மோட்டாரால் இயக்கப்படும் சக்கரத்தை பயன்படுத்தி, நாள் ஒன்றுக்கு 100 பானைகள் செய்ய முடியும். பானை செய்வதற்கான களிமண், கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதை தமிழக பகுதியில் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் விலை உயர்வு தவிர்க்க முடியவில்லை. மண்பாண்ட தொழிலுக்கு மாநில அரசு மானிய கடன் வசதி மற்றும் சலுகை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அரசு உதவி செய்தால், விலையை குறைக்க வாய்ப்பு உள்ளது' என கூறினர்.
