ADDED : ஜன 27, 2025 04:43 AM

வானுார் : தேசிய அனல்தீர் மின்சார கழக (என்.டி.பி.சி.,) குழு உறுப்பினர்கள் நேற்று ஆரோவில் பகுதியை பார்வையிட்டனர்.
புதுச்சேரி அருகே சர்வதேச நகரமான ஆரோவில் அமைந்துள்ளது. இங்குள்ள மாத்ரி மந்திர் பகுதியை தேசிய அனல்தீர் மின்சார கழக குழு உறுப்பினர்கள் பார்வையிட்டனர். இதில் கழகத்தின் நிதி இயக்குனர் ஜெய்குமார் சீனிவாசன், தென் பிராந்திய மற்றும் வர்த்தக மேற்பார்வையாளர் அஜய் துவா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
பின் ஜெய்குமார் சீனிவாசன் கூறுகையில், ஆரோவில் கட்டமைப்பு மக்களுக்காக தெய்வீக சூழலை உருவாக்கும் விதம் ஆச்சரியமாக உள்ளது. ஆரோவில் மதவெறியற்ற முறையில் செயல்படுகிறது. இங்கு மக்கள் தியானம், தன்னார்வ சேவைகளை வழங்க முடியும். இங்கு வந்தது எனக்கு நெகிழ்ச்சி அளிக்கிறது.
இப்பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை எவ்வளவு அமைதியாக இருக்கும் என்பதை நான் கற்பனை தான் செய்ய முடியும் என்றார். தொடர்ச்சியாக அவர்கள், மாத்ரி மந்திரில் தியானம் செய்தனர்.
அவர்களுடன் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இயக்குநர் சஞ்சய ரஸ்தோகி உடனிருந்தார்.
