ADDED : மே 16, 2026 03:15 AM

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சுகாதாரத் துறையில் பணியாற்றும் செவிலியர்களுக்கான நர்சிங் அலவன்ஸ் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையைச் சுகாதாரத் துறைச் செயலகம் வெளியிட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய அரசின் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, இந்த உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே இதுவரை அனைத்து நிலை செவிலியர்களுக்கும் வழங்கப்பட்டு வந்த ரூ.7,200 என்ற செவிலியர் அலவன்ஸ், தற்போது ரூ.9,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த உயர்வு 01.01.2024 முதல் முன் தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
அரியர் நிலுவைத்தொகை கடந்த 2024 ஜனவரி முதல் 2026 ஏப்ரல் வரையிலான காலத்திற்கான நிலுவைத் தொகையை, 2026--27 நிதியாண்டின் வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் செலவினங்களைச் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள தற்போதைய நிதி ஒதுக்கீட்டிலிருந்தே மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்புதலை நிதித்துறை 17.12.2025 அன்று வழங்கியிருந்தது.
இந்த உத்தரவினை கவர்னரின் ஆணைப்படி வெளியிடப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை சார்புச் செயலாளர் சவுமியா தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவு புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள அனைத்து சுகாதார அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
