/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பழைய வாகனங்கள் டில்லி செல்ல... தடை; போக்குவரத்துத் துறை அதிரடி
/
பழைய வாகனங்கள் டில்லி செல்ல... தடை; போக்குவரத்துத் துறை அதிரடி
பழைய வாகனங்கள் டில்லி செல்ல... தடை; போக்குவரத்துத் துறை அதிரடி
பழைய வாகனங்கள் டில்லி செல்ல... தடை; போக்குவரத்துத் துறை அதிரடி
ADDED : ஆக 14, 2025 06:47 AM

தலைநகர் டில்லியில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான பனிக்காலத்தில் காற்றின் தரக் குறியீடு 1,000 என்ற மோசமான நிலையை எட்டுகிறது. இதனால் குழந்தைகள், முதியோர், நுரையீரல் பாதிப்பு உடையோர் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். பழைய வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை மற்றும் அண்டை மாநிலங்களான ஹரியானா, பஞ்சாபில் எரிக்கப்படும் விவசாய கழிவுகள் டில்லியில் காற்று மாசு ஏற்பட முக்கிய காரணங்கள் என்று கூறப்படுகிறது.
இதனால், டில்லி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்களை ஜூலை 1 முதல் தடை செய்யவும், அத்தகைய வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பக்கூடாது எனவும் காற்று தர மேலாண்மை கமிஷன் உத்தரவிட்டது.
பழைய வாகனங்களை கண்டறிந்து கைப்பற்ற டில்லி போலீஸ், போக்குவரத்து போலீஸ், போக்குவரத்து துறை அதிகாரிகள், டில்லி மாநகராட்சி அதிகாரிகள் அடங்கிய பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்து, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பழைய வாகனங்களும் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், புதுச்சேரியில் இருந்தும் பழைய வாகனங்களில் டில்லி செல்ல வேண்டாம் என போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.
போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார் கூறியதாவது:
தேசிய தலைநகரான டில்லி மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் காற்றின் தரத்தை மேம்படுத்த காற்று தர மேலாண்மை அமைக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 1ம் தேதி முதல் பழைய இலகுரக, நடுத்தர, கனரக வாகனங்கள் டில்லிக்குள் நுழைய தடை விதிக்கப்படும் என, ஆணையம் அறிவித்துள்ளது.
எனவே ஆணையத்தின் ஆலோசனை, வழிகாட்டுதலின்படி புதுச்சேரியில் உள்ள பொதுமக்கள், அனைத்து போக்குவரத்து, வணிக பொருட்களை ஏற்றி செல்லும் பழைய வாகனங்கள் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் டில்லிக்குள் நுழைய கட்டாயமாக தடை விதிக்கப்படுகிறது. இந்த தடையானது இலகு ரக சரக்கு வாகனங்கள், நடுத்தர சரக்கு வாகனங்கள், கனரக சரக்கு வாகனங்களுக்கு பொருந்தும். இந்த தடையானது பி.எஸ்.,-6, சி.என்.ஜி., எல்.என்.ஜி., மின்னணு வாகனங்களுக்கு பொருந்தாது. இவ்வாறு ஆணையர் கூறினார்.
இந்த தடையின் மூலம் புதுச்சேரியில் இருந்து டில்லி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்கள் செல்லக் கூடாது.
எனவே, சரக்குடன் 7.5 டன் கொண்ட வாகனங்கள் இலகு ரக சரக்கு வாகனங்கள் என்றும், சரக்குடன் 7.6 டன் முதல் 12 டன் வரை கொண்ட நடுத்தர சரக்கு வாகனங்கள் 12 டன்னிற்கு மேல் சரக்கு கொண்ட கனரக சரக்கு வாகனங்கள் டில்லி செல்ல கூடாது. அப்படி சென்றால் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரிக்கு ஏன் தடை
புதுச்சேரியில் இருந்து அதிக அளவில் பஸ்களில் டில்லிக்கு சுற்றுலா செல்கின்றனர். இந்த பஸ்கள் 10 ஆண்டுகளை கடந்தவையாக இருந்தால் பறிமுதல் செய்யப்படும்.இதேபோல் சரக்குகளுடனும் கனரக வாகனங்கள் டில்லி செல்கின்றன. இதன் காரணமாவே இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்றனர் போக்குவரத்து துறை அதிகாரிகள்.