/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'ஒரு மாணவனுக்கு ஒரு மரக்கன்று' திட்டம்... துவக்கம்:புதுச்சேரியில் பசுமை பரப்பை அதிகரிக்க முயற்சி
/
'ஒரு மாணவனுக்கு ஒரு மரக்கன்று' திட்டம்... துவக்கம்:புதுச்சேரியில் பசுமை பரப்பை அதிகரிக்க முயற்சி
'ஒரு மாணவனுக்கு ஒரு மரக்கன்று' திட்டம்... துவக்கம்:புதுச்சேரியில் பசுமை பரப்பை அதிகரிக்க முயற்சி
'ஒரு மாணவனுக்கு ஒரு மரக்கன்று' திட்டம்... துவக்கம்:புதுச்சேரியில் பசுமை பரப்பை அதிகரிக்க முயற்சி
ADDED : ஜன 14, 2026 06:31 AM

பாகூர்: புதுச்சேரியில் பசுமை பரப்பை அதிகரித்திட மாசுக் கட்டுப்பாட்டு குழுமம் சார்பில்'ஒரு மாணவனுக்கு ஒரு மரக்கன்று' திட்டம் நேற்று பிள்ளையார்குப்பம் கிராமத்தில் துவக்கப்பட்டது. வாகன போக்குவரத்தால் வெளியேறும் மாசுகள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் மாசுகளை காற்றில் இருந்து உறிஞ்சி, அவற்றை சுத்திகரித்து, மனிதர்கள் உயிர்வாழ தேவையான ஆக்சிஜனை வழங்குதிலும், காலநிலை சமநிலையை காப்பதிலும், காடுகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. புதுச்சேரி மாநிலம், மொத்தம் 490 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. இதில், புதுச்சேரி பிராந்தியம் 284 சதுர கி.மீ., காரைக்கால் 157, மாகி 9, ஏனாம் 30, சதுர கி.மீ., பரப்பளவு ஆகும்.
கடந்த, 1988ம் ஆண்டின், தேசிய வனக்கொள்கையின்படி, மாநிலத்தின் நிலப்பரப்பில், 33 சதவீதம் காடுகள் இருக்க வேண்டும். அதன்படி, புதுச்சேரியில் 161.7 சதுர கி.மீ., பரப்பளவில் பசுமை பரப்பு இருந்தாக வேண்டும். ஆனால், 53 சதுர கி.மீ., பரப்பளவு, அதாவது 11 சதவீதமே பசுமை பரப்பு உள்ளது.
இந்நிலையில், சுத்தமான ஆக்சிஜன் தேவைக்காகவும், இயற்கை சமநிலையை பாதுகாத்திடவும், புதுச்சேரியில் பசுமைப் பரப்பை அதிகரிக்க, அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
ஒரு மாணவனுக்கு ஒரு மரம் அதன் ஒரு பகுதியாக, மாசுக் கட்டுப்பாட்டு குழுமம் சார்பில், 'கிரீன் புதுச்சேரி மிஷன்' திட்டத்தின் கீழ், புதுச்சேரியில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தரிசு நிலங்கள், கோவிலுக்கு சொந்தமான காலி இடங்கள், கடற்கரை, நீர்நிலை பகுதியில் மரங்கள் நடப்பட்டு வளர்க்கப்படுகிறது. இதுவரை 50 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 1 லட்சம் மரங்கள் என்ற இலக்கை எட்டி பிடிப்பதற்கு புதிய ஒரு முயற்சியாக, 'ஒரு மாணவனுக்கு ஒரு மரம்' என்ற கருத்தின் அடிப்படையில், மாசுக் கட்டுப்பாட்டு குழுமம், சாலையோரம் மரக்கன்றுகளை நட்டு, ஜியோ டேக் முறையில் பராமரித்திடும் புதிய திட்டத்தை துவக்கி உள்ளது.
இத்திட்டத்தின் கீழ், ஏம்பலம் தொகுதி பிள்ளையார்குப்பம் கிராமத்தில், மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது. இதில், லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., மாசுக் கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ், கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் கருணாகரன், சமூக பொறுப்பு திட்ட பங்கேற்பாளர் கன்னியக்கோவில் டி.பி.ஆர்.எஸ்., நிறுவன தலைமை அதிகாரி ஈஸ்வர் ஆகியோர் மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தனர்.
அரசு பள்ளி மாணவர்கள், பிள்ளையார்குப்பம், ஈச்சங்காடு உள்ளிட்ட கிராமங்களில் சாலையோரம் உள்ள காலி இடங்களில், பாதுகாப்பு கூண்டுடன் கூடிய மகிழம், மரமல்லி, சரக்கொன்றை, வசந்தராணி, நாக செண்பகம், கொடுக்காப்புளி உள்ளிட்ட பல்வேறு வகையான 300 மரங்களை நட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்தினர்.
ஜியோடேக் முறையில் கண்காணிப்பு தற்போது, நடப்பட்டுள்ள ஒவ்வொரு மரத்திற்கும் மாணவர் பெயருடன் சேர்த்து, ஜி.பி.எஸ்., மூலமாக தனிப்பட்ட அடையாளம் உருவாக்கி, அதன் மூலமாக, அதன் இருப்பிடம், வளர்ச்சி, ஆரோக்கியம் போன்ற தகவல்கள், ஜியோ டேக் முறையில் துல்லியமாக கண்காணித்து, வளர்ச்சிக்கு ஏற்ப உரம் அளிப்பது, நீர் பாய்ச்சுவது போன்ற பராமறிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
ஒரு லட்சம் மரக்கன்று என்ற இலக்கில், தற்போது 50 ஆயிரம் மரங்கள் நடப்பட்டுள்ள நிலையில், 11 சதவீதம் என்ற பசுமை பரப்பை, 2026ம் ஆண்டிற்குள் 15 சதவீதமாக அதிகரித்திட முடியும் என மாசுக் கட்டுப்பாட்டு குழும அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மரம் நடும் பணிகளை, புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டு குழும திட்ட அலுவலர்கள் இளங்கோ, சாந்தலட்சுமி, தினேஷ், விமல்ராஜ், ஸ்ரீநிவாசன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

