/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி சபாநாயகருக்கு எதிர்ப்பு வலுக்கிறது; மேலும் ஒரு எம்.எல்.ஏ., நம்பிக்கையில்லா தீர்மானம்
/
புதுச்சேரி சபாநாயகருக்கு எதிர்ப்பு வலுக்கிறது; மேலும் ஒரு எம்.எல்.ஏ., நம்பிக்கையில்லா தீர்மானம்
புதுச்சேரி சபாநாயகருக்கு எதிர்ப்பு வலுக்கிறது; மேலும் ஒரு எம்.எல்.ஏ., நம்பிக்கையில்லா தீர்மானம்
புதுச்சேரி சபாநாயகருக்கு எதிர்ப்பு வலுக்கிறது; மேலும் ஒரு எம்.எல்.ஏ., நம்பிக்கையில்லா தீர்மானம்
ADDED : டிச 25, 2024 04:24 AM

புதுச்சேரி : புதுச்சேரி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவேண்டி நேற்று மேலும், ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ., மனு கொடுத்துள்ளார்.
புதுச்சேரி சபாநாயகர் செல்வம் மீது, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டி சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு கடந்த 19ம் தேதியும், பா.ஜ., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ., அங்காளன் கடந்த 20ம் தேதியும் சட்டசபை செயலரிடம் மனு கொடுத்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்று உழவர்கரை தொகுதி எம்.எல்.ஏ., (பா.ஜ., ஆதரவு சுயேச்சை) சிவசங்கர், சபாநாயகர் செல்வம் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டி, சட்டசபை செயலர் தயாளனிடம், தனது உதவியாளர் மூலம் மனு அளித்தார்.
மனு விபரம்:
உழவர்கரை தொகுதி எம்.எல்.ஏ.,வான நான், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டி மனு அளித்துள்ளேன். சட்டசபையில், சபாநாயகரின் பங்கு, ஆளப்படும் சமுதாயத்தின் நலனை பிரதிபலிக்கும் வகையில், பாரபட்சமின்றி இருக்க வேண்டும். இது ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெரிய சமூகத்தின் நுண்ணிய பிரதிநிதித்துவமாகும்.
ஆனால், தற்போதைய சபாநாயகர், சட்டசபையின் புனிதத் தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதால், இந்த முன்மொழிவு உடனடித் தேவை என கருதுகிறேன்.
தற்போதைய சபாநாயகரின் நிலைப்பாடு அரசியலமைப்பு மீறல்களால் நிரம்பியுள்ளது. மேலும், அமைச்சரவையின் பங்கை மீறி, நிழல் முதல்வராக செயல்படுகிறார்.
அவரது போக்கு அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாக உள்ளது.
பொது கணக்கு குழு மற்றும் மதிப்பீட்டுக்குழு தலைவர் பதவியையும் அபகரித்து அரசியலமைப்புக்கு முரணாக செயல்பட்டு, தணிக்கை குழுவிற்கு தலைமை தாங்கியுள்ளார்.
இதன் மூலம் அரசியலமைப்பு விதிமுறைகளை மீறி, முன்னோடியில்லாத எடுத்துக்காட்டை உருவாக்கி, அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளதன் மூலம், சபாநாயகர் பதவி தனது மதிப்பை இழந்துள்ளது.
தற்போதைய சபாநாயகர் அரசியல் அமைப்புகளையும், அதிகாரிகளையும் பொது கவனத்திற்காக எந்தவொரு முக்கியமான அழைப்பிலும் தனது படத்தை திணிக்க வலியுறுத்துகிறார். இது சபாநாயகர் பதவியின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுகிறது.
இவை, சபாநாயகர் பதவியின் செயலிழப்பை வெளிப்படுத்துகிறது.
மேற்கூறிய காரணங்களுக்காக, சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நடைமுறை மற்றும் நடத்தை விதிகளின்படி கொண்டுவர வேண்டுகிறேன்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.