/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவில் சொத்துகளை கணக்கெடுக்க உத்தரவு: கவர்னர் கைலாஷ்நாதன் அதிரடி நடவடிக்கை
/
கோவில் சொத்துகளை கணக்கெடுக்க உத்தரவு: கவர்னர் கைலாஷ்நாதன் அதிரடி நடவடிக்கை
கோவில் சொத்துகளை கணக்கெடுக்க உத்தரவு: கவர்னர் கைலாஷ்நாதன் அதிரடி நடவடிக்கை
கோவில் சொத்துகளை கணக்கெடுக்க உத்தரவு: கவர்னர் கைலாஷ்நாதன் அதிரடி நடவடிக்கை
ADDED : அக் 15, 2024 06:24 AM

புதுச்சேரி: காரைக்கால் கோவில் நில மோசடி சம்பவத்தினை தொடர்ந்து, கோவில் சொத்துக்களை கணக்கெடுத்து அவற்றை முறையாக பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ள, இந்து அறநிலைய துறைக்கு கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவிட்டுள்ளார்.
காரைக்கால், கோவில்பத்து பார்வதீஸ்வரர் கோவில் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்த நிலமோசடி விவகாரம் பூதாகரமாகியுள்ளது.
கலெக்டர் மணிகண்டன், சீனியர் எஸ்.பி., மணீஷ் ஆகியோரின் நேரடி பார்வையில் முதல்நிலை விசாரணை நடைபெற்றது. அதனடிப்படையில் மோசடியில் தொடர்புடைய சப் கலெக்டர் ஜான்சன், துணை சர்வேயர் ரேணுகாதேவி மற்றும் உள்ளிட்டோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பல கோடி ரூபாய் மதிப்பிலான இந்த நில மோசடி விவகாரம் புதுச்சேரி அரசுக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால், இவ்வழக்கு விசாரணையில் எவ்வித தவறும் நடக்காமல் இருக்கும் பொருட்டு, கவர்னர் கைலாஷ்நாதன் நேரடியாக கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் கோவில் சொத்துகளை பாதுகாப்பது தொடர்பாக இந்து அறநிலைய துறைக்கு பல்வேறு உத்தரவுகளை கவர்னர் கைலாஷ்நாதன் பிறப்பித்துள்ளார்.
அதன்விபரம் வருமாறு:
காரைக்கால் கோவில்பத்து பார்வதீஸ்வரர் கோவில் நில மோசடி போன்று எந்த கோவில் நில மோசடிகளையும் பொறுத்துக் கொள்ள முடியாது. கோவில் நிலமோசடிகளில் தீவிர விசாரணை நடத்தி, மோசடியில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காண்பதோடு, அந்த கோவில் நிலங்கள் உடனடியாக மீட்டு மீண்டும் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும், கோவில் சொத்துக்கள் சம்பந்தமாக முறையான கணக்கெடுத்து, அவற்றை முறையாக பராமரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது போன்ற விவகாரங்கள் இனியும் நடக்காமல் இருப்பதற்கு வருவாய்த்துறை, நில அளவைத்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை, அறநிலையத்துறை போன்றவை கூடுதல் கண்காணிப்போடு செயல்பட வேண்டும்.
இது போன்ற நில மோசடிகளை அடையாளம் கண்டு வெளிக் கொண்டு வர மக்களிடையே இவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவிட்டுள்ளார்.
கவர்னரின் இந்த அதிரடி உத்தரவு, அரசியல் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.