பேராசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மக்கள் முன்னேற்ற கழகம் வலியுறுத்தல்
பேராசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மக்கள் முன்னேற்ற கழகம் வலியுறுத்தல்
ADDED : மே 06, 2025 04:57 AM
புதுச்சேரி: தொழில் நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர்களின் கோரிக்கையை முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரி தொழில் நுட்பப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கடந்த 10 தினங்களாக தங்களது பணிகளைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருவது வருத்தத்திற்குரியது. புதுச்சேரி அரசு அவர்களது கோரிக்கைகளுக்கு செவிமடுக்காமல் அவற்றை தீர்ப்பதற்கான எந்த முயற்சியும் எடுக்காதது வேதனைக் குரியது.
இங்குள்ள ஆசிரியர்களுக்கு அரசு பணி உயர்வு அளித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சம்பளம் தருவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் பணி உயர்வு பெற்ற பதவிகளுக்கான சம்பளத்தை இரண்டு ஆண்டுகள் ஆகியும் கொடுக்காமல் தாமதப்படுத்துகிறது. அவர்களுக்குரிய சட்டப்படியான சம்பளத்தை அளிக்க வேண்டும்.
பல ஆண்டுகள் பணிபுரிந்தும் பதவி உயர்வு பெற்று அதற்கான ஊதிய பலனை அடையாமல் ஓய்வு பெறும் பேராசிரியர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்களின் கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
முதல்வர் பேராசிரியர்களை அழைத்துப் பேசி உள்ளிருப்புப் போராட்டத்தைக் கைவிட செய்து மாணவர்களின் படிப்பு பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
