/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஊர்காவல் படை பணிக்கு உடல்தகுதி தேர்வு
/
ஊர்காவல் படை பணிக்கு உடல்தகுதி தேர்வு
ADDED : பிப் 20, 2024 02:57 AM
புதுச்சேரி : ஊர்காவல் படை வீரர்கள் பெண்களுக்கான உடல் தகுதி தேர்வு இன்று நடக்கிறது.
புதுச்சேரி காவல்துறை சார்பில், ஊர்காவல் படையில் 420 ஆண்கள் மற்றும் 80 பெண்கள் என மொத்தம் 500 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக 15,697 ஆண்களும், 4,492 பெண்களும் என மொத்தம் 20,189 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்தநிலையில் ஆண்களுக்கான உடல் தகுதித்தேர்வு கோரிமேட்டில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் கடந்த 1ம் தேதி முதல் நேற்று வரை (ஞாயிற்றுக்கிழமைகள் தவிர) நடைபெற்றது.
அதன்படி நேற்று நடைபெற்ற தேர்வில் 849 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் 483 பேர் பங்கேற்றனர். அவர்களில் 148 பேர் எழுத்துத்தேர்வுக்கு தகுதி பெற்றனர். ஆண்கள் பிரிவில் 3,034 பேர் எழுத்துத்தேர்வுக்கு தகுதிப்பெற்றுள்ளனர்.
பெண்களுக்கான உடல் தகுதித்தேர்வு இன்று துவங்கி வரும் 23ம் தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வில் பங்கேற்க 1,200 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதில் பெண்கள் குறைந்தபட்சம் 45 கிலோ எடையும், 154 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும். பெண்களுக்கான உடல் தகுதித்தேர்வில் பங்கேற்பவர்கள் 200 மீட்டர் துாரத்தை 45 வினாடிகளில் ஓடி கடக்க வேண்டும். 2.75 மீட்டர் நீளமும், 90 செ.மீ. உயரமும் தாண்ட வேண்டும்.

