துாரிகை வழியாக வந்த பிளாஸ்டிக் எச்சரிக்கை புதுச்சேரி வீதியில் விழிப்புணர்வு பயணம்
துாரிகை வழியாக வந்த பிளாஸ்டிக் எச்சரிக்கை புதுச்சேரி வீதியில் விழிப்புணர்வு பயணம்
ADDED : மார் 25, 2026 11:26 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் மண் பாண்டங்களும் டெரகோட்டா பொம்மைகளும் அணி வகுக்கும் கொசக்கடை வீதி, எப்போதும் கலை ஆர்வலர்களால் களைகட்டும். அத்தகைய ஒரு பரபரப்பான பொழுதில், ஒரு தட்டு வண்டியில் கழுகின் முகமூடி அணிந்த மனிதர் ஒருவர் வந்திறங்கியது அங்கிருந்தோரின் கவனத்தை ஈர்த்தது.
100 அடிக்கு வெள்ளை துணி சாலையில் பரப்பி இருக்க, கையில் துாரிகை ஏந்தி அவர் வரையத் தொடங்கிய வேகம், கூடியிருந்த கூட்டத்தைச் பிரமிப்பில் ஆழ்த்தியது. சடசடவெனத் தீட்டப்பட்ட கோடுகளில் இயற்கைக் காட்சிகள் உயிர் பெற்றன. ஆனால், அந்த அழகிய ஓவியத்திற்குள் அவர் அழுத்தமாக ஜொலித்து கொண்டு இருந்த பிளாஸ்டிக் ஒழிப்பு அனைவரையும் உலுக்கியது. ஒவ்வொருவரின் மனசாட்சியையும் தட்டுவதாக அமைந்தன. இயற்கையின் மடியில் பிளாஸ்டிக் நஞ்சு எப்படி ஊடுருவுகிறது என்பதை ஒரு மவுனக் கலைவடிவமாக அவர் கண்முன் நிறுத்தினார்.
தனது கழுகு முகமூடியைக் களைந்த அந்த ஓவியக் கலைஞர் பேச துவங்கினார். என்னுடைய பெயர் பரமேஷ் ஜோலட். பெங்களூரு தான் பூர்வீகம். நாம் எல்லோரும் அறிந்த பிரச்னையை தான் இதில் ஓவியமாக பதிவிட்டுள்ளேன். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாடு பூமிக்கு பெரிய மாசு. அதை தவிர்க்க வேண்டும்.
இது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதிலிருந்து முழுமையாக விலக முடியாத நிலை… இதுதான் ''தெரிந்தே தெரியாதது'' என்பது பிளாஸ்டிக் ஒழிப்பிற்கு பொருந்தும். நமக்கும் தெரிந்து கூட அன்றாட வாழ்வில் இந்த பிளாஸ்டிக்கை பயன்படுத்துகிறோம். மாற்று பொருட்களை மாறி இந்த பூமியை காப்பது நம்முடைய கடமை' என்றார்.
''பிளாஸ்டிக் ஒழிப்பிற்கு கலை தீர்வு தராது… ஆனால் அது விழிப்புணர்வு தரும் என்று ஓவிய கலைஞர் பரமேஷ் ஜோலட் கண்களை மூடியபோது, அங்கிருந்த பார்வையாளர்களின் கண்கள் புதிய விழிப்புணர்வுடன் திறந்தன.
