அரசு பள்ளி தலைமை ஆசிரியரை தாக்கிய நபருக்கு போலீஸ் வலை
அரசு பள்ளி தலைமை ஆசிரியரை தாக்கிய நபருக்கு போலீஸ் வலை
ADDED : மார் 21, 2026 10:01 PM
புதுச்சேரி: வில்லியனுாரில் அரசு பள்ளி தலைமை ஆசிரியரை தாக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ரெட்டியார்பாளையம், மோரிஸ்சான் தோட்டம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி; கரியமாணிக்கத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர். இவர், நேற்று முன்தினம் வில்லியனுார் துணை ஆய்வாளர் வட்டம் -4 அலுவலகத்திற்கு சென்று, வினாத்தாள் பெற்றுக் கொண்டு, திரும்ப பள்ளிக்கு வருவதற்காக வில்லியனுார் பெருமாள் கோவில் எதிரில் பஸ்சிற்காக காத்திருந்தார்.
அப்போது அங்கு ஒருவர் அவரது மனைவியை செருப்பால் அடித்தார். அதனை லட்சுமி தட்டிக் கேட்டார். அதற்குள் பஸ் வரவே, லட்சுமி பஸ்சில் ஏறிவிட்டார். அப்போது பஸ் கோட்டைமேடு பஸ் நிறுத்தம் வந்தபோது பஸ்சை பின் தொடர்ந்து புல்லட்டில் (பி.ஒய்.01.சி.டி.8212) வந்த நபர் பஸ்சை வழிமறித்து, லட்சுமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். லட்சமி கொடுத்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
