போஸ்டர் செய்தி சபாநாயகர் தேர்தலில் போட்டி ஜான்குமார் எம்.எல்.ஏ., உறுதி
போஸ்டர் செய்தி சபாநாயகர் தேர்தலில் போட்டி ஜான்குமார் எம்.எல்.ஏ., உறுதி
ADDED : ஆக 27, 2026 11:54 PM
புதுச்சேரி: சபாநாயகர் தேர்தலில், 100 சதவீதம் போட்டியிடுவேன் என ஜான்குமார் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் சட்டசபை தேர்தலில், பா.ஜ., என்.ஆர்.காங்., கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைத்தது.
என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி முதல்வராக பதவியேற்றார். பின் படிப்படியாக அமைச்சர்கள் பதவியேற்றனர். இருந்தாலும், அவர்களுக்கு இலாகா ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஒருவழியாக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கினாலும், சபாநாயகர் தேர்தல் இன்னும் நடக்கவில்லை.
தற்போது 16வது சட்டசபையின் முதல் கூட்டம் தற்காலிக சபாநாயகர் அன்பழகன் தலைமையில் நடந்தது வருகிறது.
சட்டசபைக்கு நிரந்தர சபாநாயகரை நியமிக்க வேண்டும் என சட்டசபைக்கு உள்ளேயும், வெளியேயும் எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பா.ஜ., எம்.எல்.ஏ., ஜான்குமார் கூறியதாவது:
சபாநாயகரை கட்சி முடிவு செய்வதில்லை. எம்.எல்.ஏ.,க்கள்தான் முடிவு செய்வார்கள். அந்த அடிப்படையில் அமைச்சர் பதவியை விட்டு கொடுக்க வேண்டும்.
காரைக்காலுக்கு ஒரு நபருக்கு கொடுத்தாக வேண்டும். உங்களுக்கு சபாநாயகர் கொடுக்கிறோம் என கூறினர். அந்த வாக்குறுதியை காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. கட்டாயமாக சபாநாயகர் தேர்தலில் நிற்க அதிகமான சூழல் உள்ளது. சபாநாயகர் பதவிக்கு, 100 சதவீதம் போட்டியிடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
சபாநாயகர் பதவிக்கு பலரின் பெயர் அடிப்பட்டு வரும் நிலையில் ஜான்குமார் எம்.எல்.ஏ., கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
