/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆரம்ப சுகாதார நிலையத்தை முழு நேரம் இயக்க வேண்டும்
/
ஆரம்ப சுகாதார நிலையத்தை முழு நேரம் இயக்க வேண்டும்
ADDED : நவ 01, 2024 05:31 AM
நெட்டப்பாக்கம்: கரையாம்புத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முழு நேரம் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெட்டப்பாக்கம் தொகுதி, கரையாம்புத்துார் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் பொதுமருத்துவம், சித்த மருத்துவம், கண் மருத்துவம் பிரிவுகள் இயங்கி வருகின்றன.
மருத்துவமனைக்கு கரையாம்புத்துார், பனையடிக்குப்பம், மணமேடு, கடுவனுார் தமிழக பகுதியான களிஞ்சிக்குப்பம், சொர்ணாவூர் உள்ளிட் பல்வேறு பகுதியில் இருந்து தினமும் நுாற்றுாக்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் காலை 12:00 மணி வரை மட்டுமே டாக்டர் மருத்துவம் பார்க்கிறார்.
அதன்பிறகு இரவு 8:00 மணி வரை செவிலியர் முதலுதவி சிகிச்சை அளிக்கிறார்.
இரவு நேரங்களில் முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கு கூட செவிலியர் இல்லாததால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அவதியடைகின்றனர்.
கரையாம்புத்துார் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராம பகுதி மக்கள் அவசர சிகிச்சை பெற வேண்டுமானல் 15 கி.மீ., தொலைவில் உள்ள நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டும்.
இதனால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே,கரையாம்புத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை முழு நேரம் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.