சிறை கைதி தற்கொலை விவகாரம் 8 வாரத்திற்குள் விளக்கம் அளிக்க உத்தரவு
சிறை கைதி தற்கொலை விவகாரம் 8 வாரத்திற்குள் விளக்கம் அளிக்க உத்தரவு
ADDED : டிச 06, 2024 04:56 AM
புதுச்சேரி : காரைக்கால் சிறைவாசி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பற்றி தகவல் தெரிவிக்காதது குறித்து 8 வாரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டுமென தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 23 வயது ஆயுள் தண்டனை கைதி பிரதீஷ் என்பவர் கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி துாக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில்,தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்குப் புகார் அனுப்பப்பட்டது.அதில் பிரதீஷ் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்திற்கு சிறைத் துறையும், புதுச்சேரி அரசும்தான் பொறுப்பு. பணியில் அலட்சியமாக இருந்த சிறைத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
புகாரைப் பரிசீலித்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் தற்போது உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பதிவகத்தில் இந்த காவல் மரணம் தொடர்பாக எந்த தகவலும் காணப்படவில்லை. எனவே, காரைக்கால் கலெக்டர், சீனியர் எஸ்.பி., காரைக்கால் மாவட்ட சிறைக் கண்காணிப்பாளர் ஆகியோர் இக்காவல் மரணம் பற்றி தகவல் தெரிவிக்காதது ஏன் என்பது குறித்து 8 வாரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.
மரணம் ஏற்பட்டதற்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய அறிக்கை, முதல்கட்ட சுகாதாரப் பரிசோதனை அறிக்கை, காலவரிசைப்படி சிறைக்கு உள்ளேயும் வெளியேயும் சிகிச்சை அளிக்கப்பட்ட முழு மருத்துவ ஆவணங்கள், பிரேத விசாரணை அறிக்கை, தட்டச்சு செய்யப்பட்ட உடற்கூறாய்வு அறிக்கை, தடய அறிவியல் துறை அறிக்கையின் அடிப்படையிலான மரணத்திற்கான காரணம், நீதித்துறை நடுவரின் விசாரணை அறிக்கை ஆகியவற்றை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், துறை ரீதியான நடவடிக்கை, குற்ற நடவடிக்கை, சி.பி.சி.ஐ.டி., விசாரணை அறிக்கை ஆகியவற்றை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
