ஓட்டுப்பதிவிற்கு முந்தைய 48 மணி நேரத்தில் கட்சிகள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்
ஓட்டுப்பதிவிற்கு முந்தைய 48 மணி நேரத்தில் கட்சிகள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்
ADDED : மார் 25, 2026 11:22 PM
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவிற்கு முந்தைய 48 மணி நேர காலத்தில், அரசியல் கட்சியினர் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் செய்திக்குறிப்பு;
புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு வரும் 9ம் தேதி நடக்கிறது. ஓட்டுப்பதிவு முடிவடையும் நேரத்திற்கு முந்தைய 48 மணி நேர காலத்தில், அரசியல் கட்சியினர் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் -1951, பிரிவு -126ன் படி, ஓட்டுப்பதிவு முடிவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக 48 மணி நேரத்தில் தேர்தல் பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும். பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், உள்ளிட்ட அனைத்து தேர்தல் நடவடிக்கைகளும் இக்காலகட்டத்தில் நிறுத்தப்படும்.
பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, 2023 சட்டத்தின் பிரிவு 163ன் கீழ், சட்ட விரோதமாக கூடுவதை தடை செய்யவும், ஓட்டுப்பதிவு நடைபெறும் பகுதிகளில் ஓட்டுப்பதிவு முடிவதற்கான நேரத்திற்கு முன்பாக 48 மணி நேர காலத்தில் பொதுக் கூட்டங்களை நடத்த தடை விதிக்கவும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.
இந்த சட்டப் பிரிவின்கீழ், விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் படி, ஒரே இடத்தில் 5 பேருக்கு மேல் கூடுதல் அல்லது ஒன்றாகச் செல்லுதல் அனுமதிக்கப்படமாட்டாது. ஆனால், 48 மணி நேரத்தில் வீடு வீடாகச் சென்று ஓட்டு கேட்கும் நடவடிக்கைகளுக்கு இந்த தடை பொருந்தாது.
அதேபோல், ஓட்டுப்பதிவு முடிவதற்கான நேரத்திற்கு முன், 48 மணி நேரத்தில் ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி இல்லை. பிரசார காலம் முடிந்த பின் தொகுதியில் அரசியல் கட்சியினர் இருப்பதற்கான மாதிரி நன்னடத்தை விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஓட்டுப்பதிவு முடிவதற்கான நேரத்திற்கு முன்பாக 48 மணி நேர காலப்பகுதியில் எந்த விதமான தேர்தல் பிரசாரமும் நடைபெறாது என்பதால் தொகுதிக்கு வெளியிருந்து கொண்டு வரப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்கள், கட்சிப் பணியாளர்கள், ஊர்வலக்காரர்கள், பிரசார செயற்பாட்டாளர்கள் மற்றும் அந்த தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர், பிரசார காலம் முடிந்தவுடன் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். இந்த உத்தரவுகளை அரசியல் கட்சியினர் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
