பொதுப்பணித்துறை அலுவலகத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை
பொதுப்பணித்துறை அலுவலகத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை
ADDED : ஆக 27, 2025 05:54 AM

புதுச்சேரி : செம்மண் நிறத்தில் குடிநீர் விநியோகத்தை கண்டித்து, சுதானா நகர் பகுதி மக்கள் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
முதலியார்பேட்டை தொகுதி, சுதானா நகரில் புதிதாக அமைக்கப்பட்ட 20 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியின் மூலம் சுதானா நகர், நைனார் மண்டபம், முருங்கப்பாக்கம், பிரியதர்ஷினி நகர் உட்பட பல பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
குடிநீர் தரமற்ற நிலையில், செம்மண் நிறத்தில் வருவதால், அதனை பயன்படுத்த முடியவில்லை. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இவில்லை.
இதனை கண்டித்து, அசுத்தமான குடிநீரை பாட்டிலில் எடுத்து கொண்டு அப்பகுதி பொதுமக்கள் 30க்கும் மேற்பட்டோர் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில், உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அப்பகுதிக்கு அனுப்பி ஆய்வு செய்து, சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்தார். அதையேற்று, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
