ADDED : ஜூலை 01, 2025 02:12 AM

புதுச்சேரி : புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறைக்கு (ஐ.எஸ்.ஓ. ) லஞ்ச எதிர்ப்பு மேலாண்மை அமைப்பு உரிமத்தை, மத்திய அரசின், இந்திய தர நிர்ணய பணியகம் வழங்கி உள்ளது.
இந்தியாவின் தேசிய தர நிர்ணய ஆணையமான, இந்திய தர நிர்ணய பணியகம், பல்வேறு பிரிவுகளுக்கான சர்வதேச தர நிர்ணய அமைப்பின் (ஐ.எஸ்.ஓ.) தரங்களை ஏற்றுக்கொண்டு வெளியிட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறைக்கு (ஐ.எஸ்.ஓ. 37001:2016) லஞ்ச எதிர்ப்பு மேலாண்மை அமைப்பு என்ற உரிமத்தை வழங்கி உள்ளது.
விவசாயிகளுக்கு வெளிப்படையான மற்றும் பொறுப்புணர்வுள்ள இணையத்தள சேவைகள் மற்றும் சேவைகளில் வைக்கப்பட்டுள்ள பிற கட்டுப்பாடுகள் காரணமாக, இந்த (ஐ.எஸ்.ஓ.) உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக, ஐ.எஸ்.ஓ.,தரச்சான்று பெற்ற முதல் அரசுத் துறை என்ற பெருமையை புதுச்சேரி அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை பெற்றுள்ளது. வேளாண் துறை இயக்குனர் வசந்தகுமார், அரசு செயலர் நெடுஞ்செழியன் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில், முதல்வர் ரங்கசாமியிடம், சர்வதேச தரச் சான்றிதழை வழங்கி, அவரிடமிருந்து பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் பெற்றனர்.
