மேகதாது அணை கட்ட எதிர்ப்பு; புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம்
மேகதாது அணை கட்ட எதிர்ப்பு; புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம்
ADDED : செப் 01, 2026 07:29 AM

புதுச்சேரி: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை எதிர்த்து, புதுச்சேரி சட்டசபையில், எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் உள்ளிட்டோர் தனி நபர் தீர்மானம் கொண்டு வந்தனர்; இது, அரசு தீர்மானமாக ஏற்கப்பட்டது.
தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு மாறாக, மேகதாதுவில், காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிக்கிறது. இது, புதுச்சேரி மாநில மக்கள் நலனுக்கு எதிரானது. கர்நாடக அரசின் இந்த செயலுக்கு எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்கிறேன்.
காவிரி பாசன மாநிலங்களின் முன் அனுமதி பெறாமல் அணை கட்டுவதை ஏற்க முடியாது. கர்நாடக அரசின் இந்த நடவடிக்கைக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து இந்த தீர்மானத்தை கொண்டு வந்த எதிர்க்கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ.,க்களும் பேசினர். அரசு முன்மொழிந்த தீர்மானத்தை, சபாநாயகர் அன்பழகன் குரல் ஓட்டெடுப்புக்கு அனுமதித்தார். முதல்வர் ரங்கசாமி கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
