/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சினிமா ஹீரோவான புதுச்சேரி டாக்டர்
/
சினிமா ஹீரோவான புதுச்சேரி டாக்டர்
ADDED : ஏப் 27, 2025 05:30 AM

முன்னாள் ராணுவ வீரரான எம்.ஏ. பாலா, 'கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்' என்ற படத்தைத் தயாரித்து, இயக்கியுள்ளார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அடுத்தப் படமான 'எக்ஸ் ரே கண்கள்' என்ற சினிமா படத்தை இயக்கி வருகிறார்.
டுவிங்கில் லேப்ஸ் புரொடக் ஷன்ஸ் சார்பில் எம்.ஏ.பாலா தயாரித்து, இயக்கும் இந்த படத்தின் நாயகனாக புதுச்சேரியை சேர்ந்த டாக்டர் ராம்பிரசாத் நடிக்கிறார். யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார்.
ராம் பிரசாத், பெத்திசெமினார் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர். இந்த பள்ளியில் பிளஸ் 2 முடித்த அவர், மகாத்மா காந்தி மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., முடித்தார்.
பின், சினிமா மீதான ஆர்வம் காரணமாக சென்னையில் முகாமிட்டார். ராம் பிரசாத்தின் ஆர்வத்தையும், திறமையையும் பார்த்த இயக்குனர் எம்.ஏ.பாலா தனது படத்தில் வாய்ப்பு வழங்கினார். இந்த படத்தில் டாக்டராகவே ராம் பிரசாத் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
திரில்லர் கதையம்சம் எக்ஸ் ரே கண்கள் படம் வேகமாக வளர்ந்து வருகிறது. சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வருகிறது.
டாக்டர் ராம் பிரசாத்திற்கு முதல் படத்திலேயே ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதால், அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. புதுச்சேரியின் மண்ணின் மைந்தனான அவர் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பது புதுச்சேரி மக்களின் விருப்பம். இதுகுறித்து ராம் பிரசாத் கூறும்போது, 'சிறு வயது முதலே சினிமா மீது எனக்கு ஆர்வம் உண்டு. தற்போது ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் சாதிக்க முழுவதுமாக முயற்சி செய்வேன்' என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

