/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திடீர் கனமழையால் வெள்ளக்காடானது புதுச்சேரி மருத்துவமனையில் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் அவதி
/
திடீர் கனமழையால் வெள்ளக்காடானது புதுச்சேரி மருத்துவமனையில் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் அவதி
திடீர் கனமழையால் வெள்ளக்காடானது புதுச்சேரி மருத்துவமனையில் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் அவதி
திடீர் கனமழையால் வெள்ளக்காடானது புதுச்சேரி மருத்துவமனையில் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் அவதி
ADDED : அக் 11, 2024 05:55 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரு மணி நேரம் கொட்டிய கனமழையில் சாலைகள் மற்றும் அரசு மருத்துவமனையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் நோயாளிகள் அவதியடைந்தனர்.
புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக பகலில் கடும் வெயிலும், இரவில் அவ்வப்போது லேசான மழையும் பெய்து வந்தது.
இந்நிலையில், நேற்று காலை 10:00 மணி அளவில் நகர் பகுதிகளில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய துவங்கியது. சற்று நேரத்தில் கனமழை கொட்டியது. ஒரு மணி நேரம் பெய்த கனமழையால், புதுச்சேரி நகர சாலைகள் அனைத்து வெள்ளக்காடானது.
குறிப்பாக, முத்தியால்பேட்டை, புஸ்சி வீதி, மிஷன் வீதி, ரெயின்போ நகர், இ.சி.ஆர்., கிருஷ்ணா நகர், காந்தி வீதி, சின்ன சுப்ராயப்பிள்ளை வீதி, செயின்ட் தெரேஸ் வீதி, பாக்கமுடையன்பேட், சாரம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
மேலும், ரெயின்போ நகர், சாரம் வேல்முருகன் நகரின் சில வீடுகளில் மழைநீர் உள்ளே புகுந்ததால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். தற்காலிக பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்கி, சேறும், சகதியுமாக மாறியது. இதனால், பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
மேலும், கனமழையின் காரணமாக, சட்டசபை வளாகம் அருகேயுள்ள அரசு பொது மருத்துவமனையின் உள்ளே மழைநீர் புகுந்தது. இதனால், நோயாளிகளும், ஊழியர்களும் அவதியடைந்தனர்.
நகரில் முக்கிய சாலைகளில் தேங்கிய மழைநீரை பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி ஊழியர்கள் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் ஒரு மணி நேரம் பெய்த கனமழைக்கே நகரமே வெள்ளக் காடாகியது. இதேபோல், பாகூர், வில்லியனுார், திருக்கனுார், மதகடிப்பட்டு பகுதிகளிலும் நேற்று காலை கனமழை கொட்டித் தீர்த்தது.