ADDED : மே 28, 2026 06:30 AM
புதுச்சேரி: எஸ்.ஓ.எப்., சார்பில் நடத்தப்பட்ட சர்வதேச ஒலிம்பியாட் போட்டிகளில் புதுச்சேரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
அறிவியல் ஒலிம்பியாட் அறக்கட்டளை (எஸ்.ஓ.எப்.) என்பது பள்ளி மாணவர்களிடையே போட்டித் திறன் மற்றும் கல்வி ஆர்வத்தை வளர்க்கும் நோக்கில் செயல்படும் கல்வி அமைப்பாகும். இவ்வமைப்பு சர்வதேச கணிதம், அறிவியல், கணினி அறிவியல், ஆங்கிலம், பொது அறிவு, சமூக அறிவியல் உள்ளிட்ட பல்வேறு ஒலிம்பியாட் தேர்வுகளை நடத்தி வருகிறது.
இத்தேர்வுகள் மாணவர்களின் கருத்தியல் புரிதல், பகுப்பாய்வுத் திறன் மற்றும் சிக்கல் தீர்க்கும் ஆற்றலை உலகளாவிய அளவில் மதிப்பிடும் தளமாக விளங்குகின்றன.
இந்தாண்டு நடந்த தேர்வுகளில் 70 நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். இதில் புதுச்சேரியிலிருந்து 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளியின் 6ம் வகுப்பு மாணவர் ரோஹித் சர்வதேச பொது அறிவு போட்டியில் 2ம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.
அதேபோல், ஆச்சார்யா பாலசிக் ஷா மந்திர் பள்ளியின் முதலாம் வகுப்பு மாணவி நீலா ஜினி, தேசிய அறிவியல் போட்டியில் 3ம் இடம் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
சாதனை படைத்த மாணவர்களுக்கு சிறந்த செயல்திறன் மற்றும் தகுதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
